விநாயகர் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது; கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு

விநாயகர் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளாா்.
விநாயகர் சிலைகள் தயாரிக்க ரசாயன பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டு உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது தொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.
சிலைகள் கரைப்பு
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கூறிஇருந்தார்.






