சதுரகிரி கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்ததால் வனத்துறை கேட் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பவுர்ணமி வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக மதுரை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






