சிறுசேமிப்புகளுக்கு கூடுதல் வட்டி


சிறுசேமிப்புகளுக்கு கூடுதல் வட்டி
x
தினத்தந்தி 3 Oct 2017 11:30 PM GMT (Updated: 3 Oct 2017 6:36 PM GMT)

‘சிக்கனமாய் வாழணும், சேர்த்து வைக்க பழகணும்’ என்பது திரைப்பட பாடலாக இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக தமிழ் குடும்பங்களில் உள்ள பெரியவர்கள், இளைய சமுதாயத்தினருக்கு சொல்லும் அறிவுரையாகும்.

எறும்புக்கூட மழைக்காலத்தில் தனது உணவுக்காக ஆங்காங்கு அரிசி போன்ற உணவு தானியங்களை சேமித்து வைக்கிறது. எறும்புக்கு மழைகாலம் என்றால் மனிதகுலத்திற்கு முதிர்வயது காலத்திற்காக சேமித்து வைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். கவிஞர் வைரமுத்து சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில், ‘முதுமைக்காலத்தை மனதில் நினைத்து எதிர்காலத்திற்காக ஒவ்வொரு மனிதனும், தன் வருவாயில் மூன்றில் ஒருபங்கு சேமிக்கவேண்டும். சோறு என்பது இன்றைய தேவை. அரிசி என்பது நாளைய தேவை. விதைநெல் என்பது எதிர்கால தேவை. சேமிப்பும் இப்படி மூன்று வகைப்பட்டதுதான். இதுதான் மனித வாழ்க்கையின் தத்துவம். வேறு ஒன்றும் இல்லை’ என்று கூறிய அவர், எவ்வாறு சேமிக்கவேண்டும் என்பதற்கும் ஒரு அறிவுரையை கூறியுள்ளார்.

நன்கு தெரிந்த நம்பிக்கையுள்ள சேமிப்புகளில்தான் முதலீடு செய்யவேண்டும் என்பதை சொல்லும் வகையில், ‘ஆழம் கண்டுதான் நீச்சல் அடிப்பேன். அதனால், எனக்கு ஆறுகளும், குளங்களுமே போதும். கடல்வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். முதலில், முதிர்வயதிற்காக சேமிக்கவேண்டும் என்ற உணர்வு வேண்டும். அப்படி சேமிக்கவேண்டும் என்று முடிவெடுத்தால், எது நம்பிக்கைக்குரிய வகையில், பின்னால் நமக்கு பலனும், வருமானமும் தரும் என்று யோசித்து சேமிக்கவேண்டும்.

அந்தவகையில், பொதுமக்கள் நம்பிக்கைக்குரிய சேமிப்புகளில் பணம் போடாமல், அதிகவட்டி கிடைக்கிறது என்பதற்காக போலி நிதிநிறுவனங்களில் முதலீடுசெய்து, உள்ளதும் போச்சுடா என்றநிலையில் வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி சேமித்த சேமிப்புகளையெல்லாம் ஏமாந்துப்போய் விட்டுவிடும் நிலைமையும் நாட்டில் அடிக்கடி செய்திகளாக வருகிறது. ஆக, பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய சேமிப்புகள் என்றால், அது அஞ்சலகங்கள், வங்கிகளில் சேமித்துவைக்கப்படும் சேமிப்புகள்தான். இதில், அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களுக்கு பொதுமக்களிடம் நல்லஆதரவு இருக்கிறது. அதனால்தான் ஏராளமானவர்கள் அஞ்சலகங்களில் உள்ள சேமிப்புகளையே நாடுகிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், ஆண்டுதோறும் சிறுசேமிப்பு கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.20,737 கோடியே 29 லட்சம் வசூலாகியுள்ளது. பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி கால்ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த வட்டித்தொகையெல்லாம் இப்போது 2 கால் ஆண்டுகளாக .1 சதவீதம் குறைக்கப்பட்டு வந்துள்ளநிலையில், இந்த கால்ஆண்டில் அதாவது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள கால்ஆண்டுக்கு வட்டி விகிதம் கூட்டவும் இல்லை, குறைக்கவும் இல்லை என்பது நிச்சயமாக வரவேற்கக்கூடியது.

இப்போதைய நிலவரப்படி, வருங்கால வைப்புநிதிக்காக 7.8 சதவீதமும், மூத்தகுடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.5 சதவீதமும், தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 7.8 சதவீதமும், அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்திற்கு 7.5 சதவீதமும், தொடர் வைப்புநிதிக்கு 7.1 சதவீதமும், செல்வமகள் சேமிப்புத்திட்டத்திற்கு 8.3 சதவீதமும், சேமிப்புநிதிக்கு 4 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2016–17–ம் ஆண்டுகளை ஒப்பிட்டால் பெருமளவில் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. சிறுசேமிப்பு அதிகளவில் இருந்தால்தான் அரசு பொருளாதார நிலைமையும் வலுவாக இருக்கும். எல்லா திட்டங்களுக்கும் இப்படி வட்டியை குறைத்துக்கொண்டே போவது சரியல்ல.

இப்போதுள்ள நிலையில் மூத்த குடிமக்களுக்கு மருத்துவசெலவு போன்ற பல்வேறு செலவுகள் உயர்ந்துகொண்டே போவது, பெருகிவரும் விலைவாசிகள் ஆகிய நிலையில், அரசு இதுபோன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைக்காமல், கூடுதல்வட்டி அளிப்பது பொதுமக்களின் நலனை பாதுகாப்பதாக அமையும். இது மூத்த குடிமக்களின் வேண்டுகோள் மட்டுமல்ல, எதிர்காலத்துக்காக சேமித்துவைக்கும் அனைவரின் கோரிக்கையுமாகும்.

Next Story