அரசியலில் சலசலப்பு


அரசியலில் சலசலப்பு
x
தினத்தந்தி 10 Nov 2017 9:30 PM GMT (Updated: 10 Nov 2017 2:36 PM GMT)

அரசியலை பொறுத்தமட்டில், ‘நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை’ என் பார்கள். எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பார்கள்.

ரசியலை பொறுத்தமட்டில், ‘நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை’ என் பார்கள். எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பார்கள். அதுபோன்று நடந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. ‘தினத்தந்தி’யின் 75–வது ஆண்டு பவளவிழா கடந்த 6–ந்தேதி சென்னையில் சீரும் சிறப்புமாக நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். மிகவும் சிறப்பான ஏற்பாடுகளோடு நடந்த இந்தவிழாவில், பிரதமர் மிகவும் மகிழ்வோடு காணப்பட்டார். விழா முடிந்தவுடன் அப்படியே மேடையில் இருந்து அவர் திரும்பி சென்றுவிடவில்லை. மேடையைவிட்டு கீழே இறங்கி தன்னை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டி ருக்கும் வைகோ 2–வது வரிசையில் அமர்ந்து கொண்டி ருந்தாலும் அவரைப்பார்த்து, ‘வைகோ ஹவ் ஆர் யூ’ என்றுகேட்டு அவருடன் கைகுலுக்கினார். அதேபோன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனான டாக்டர் அன்புமணி ராமதாசுடனும் பேசிவிட்டு சென்றார். பிரதமரின் சுற்றுப்பயணத்தில் ‘தினத்தந்தி’ நிகழ்ச்சியும், அவரிடம் இணைச்செயலாளராக பணி யாற்றிய தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதன் மகள் திருமணத்திலும் கலந்து கொள்வதாக மட்டுமே இருந்தது.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிற்குச்சென்று அவரிடம் உடல்நலம் விசாரித்தார். அதுமட்டுமல்லாமல், ‘‘இங்கிருந்தால் உங்களை சரியாக ஓய்வெடுக்கவிடமாட்டார்கள். எல்லோரும் வந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். டெல்லிக்கு என் வீட்டில் ஓய்வெடுக்க வாருங்கள்’’ என்று அழைத்தார். கருணாநிதி மனைவி தயாளு அம்மாளையும் சென்று பார்த்தார். அவரிடமும் உடல்நலம் விசாரித்தார். அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் தி.மு.க. தலைவர் வீட்டிற்கு மோடி சென்றது அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. மோடி அரசியலுக்காக வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக சொல்லி விட்டார். அடுத்த 2 நாட்களிலேயே ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து ஒரு ஆண்டான நாளில் அதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டமாக தி.மு.க. பல இடங்களில் நடத்தியது. மதுரையில் நடந்த கூட்டத்தில் பிரதமரை அரசியலுக்காக பயன்படுத்த எந்தநேரத்திலும், எந்த நிமிடத்திலும் நாங்கள் தயாராக இல்லை. இன்றைக்கு அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சிலர் திட்டமிடுகிறார்கள். அவர்களது கனவு நிச்சயம் பலிக்காது என்று மு.க.ஸ்டாலின் உறுதியாக கூறினார்.

பிரதமரின் வருகையை தொடர்ந்து நடந்த இந்த சம்பவங்களால் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக சொன் னாலும், தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான நிலையே காணப்படுகிறது. 1977–78–ல் பா.ஜ.க. தொடங்குவதற்கு முன் ‘ஜனசங்கம்’ என்றபெயரில் கட்சி இருந்தது. அப்போது அந்தகட்சியும் அங்கம் வகித்திருந்த ஜனதா அரசாங்கத் திலும், 1988–90–ல் பா.ஜ.க வெளியே இருந்து ஆதரவு வழங்கிய வி.பி.சிங் அரசாங்கத்திலும், தி.மு.க. அங்கம் வகித்திருந்தது. 1999–ல் வாஜ்பாய் அரசாங்கத்திற்கு ஜெயலலிதா திடீரென ஆதரவை வாபஸ் பெற்றநேரத்தில், வாஜ்பாயின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது தி.மு.க. ஆதரவு அளித்தது. இதனைத்தொடர்ந்து பாராளு மன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த தி.மு.க., வாஜ்பாய் அரசாங்கத்தில் 2004 வரை அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. 2001–ம் ஆண்டு தி.மு.க.வும், பா.ஜ.கவும் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்தன. 2004–ல் பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட தி.மு.க., காங்கிரசோடு கூட்டணி வைத்தது. 2012–13–ல் காங்கிரசுடன் கூட்டணியை முறித்து மீண்டும் 2016–ல் காங்கிரசோடு கூட்டணி வைத்தது. ஆக, அரசியலில் உறவுகள் மாறி மாறி வரும். ‘‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும்’’ என்பார்கள். ஆக, தேர்தலில் யாரோடு கூட்டணி, யாரோடு உறவு என்பதெல்லாம் இப்போது யார் என்னதான் சொன்னாலும், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன் அடிப்படையில் தான் உறவுகள் அமையும். இது ஒரு ‘அரசியல் சதுரங்கம்’ தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Next Story