தேசிய மருத்துவ ஆணையம்


தேசிய மருத்துவ ஆணையம்
x
தினத்தந்தி 5 Jan 2018 9:30 PM GMT (Updated: 5 Jan 2018 6:10 PM GMT)

1933–ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது இந்திய மருத்துவ கவுன்சில். மருத்துவக்கல்வி, மருத்துவசேவை, மருத்துவர்களை நெறிப்படுத்துதல் போன்றவற்றை தனது தலையாய பணிகளுக்கான நோக்கமாகக் கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் இயங்கி வருகிறது.

1933–ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது இந்திய மருத்துவ கவுன்சில். மருத்துவக்கல்வி, மருத்துவசேவை, மருத்துவர்களை நெறிப்படுத்துதல் போன்றவற்றை தனது தலையாய பணிகளுக்கான நோக்கமாகக் கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் இயங்கி வருகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் பற்றி சமீப காலங்களாக நிறைய புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் என்னும் அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் மக்களவையில் மத்திய அரசாங்கம் தாக்கல் செய்தது.

இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகும். ஆனால், 25 பேர்கள் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் பெரும்பாலும் மத்திய அரசாங்கம் நியமிக்கும் தேர்வுக்குழுவால் நியமனம் பெறுபவர்கள் ஆவார்கள். ஆக, தேசிய மருத்துவ ஆணையம் சுயேச்சையாக இயங்காது. மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்கும் என்று ஒரு பெரிய குறை கூறப்படுகிறது. இதில் மருத்துவர்கள் பெரும்குறையாக சொல்வது ‘ஆயுஷ்’ என்று கூறப்படும் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படித்த மருத்துவர்கள் ‘பிரிட்ஜ்கோர்ஸ்’ என்று கூறப்படும் இணைப்பு படிப்பை சிறிதுகாலம் படித்தால் அவர்களும் எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் டாக்டர்கள் போல, அலோபதி மருந்தை எழுதிக்கொடுப்பதற்கு தகுதிபடைத்தவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற மருத்துவங்கள் அலோபதி மருத்துவத்திற்கு சளைத்தது அல்ல என்று இந்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் கருத்தாகும். ஆனால், அவர்களையே அலோபதி மருத்துவத்தையும் நீங்கள் செய்யலாம் என்று கூறினால், இந்த மருத்துவத்தின் தகுதியும், மேன்மையும் பற்றி அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறதா? என்பது அலோபதி மருத்துவர்களின் கேள்வியாக இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இந்த மசோதாவில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 40 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டில் 60 சதவீதமும் நிர்ணயிக்கும் வகையில், 40 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை மட்டும் அரசே நிர்ணயிக்கும் என்று கூறியுள்ளது. மீதி 60 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை கல்லூரிகளே நிர்ணயித்தால் மருத்துவக் கல்விகட்டணம் உயரும். ஏழை மாணவர்களால் இவ்வளவு உயர்ந்த கட்டணத்தில் படிக்கமுடியாது என்பது மற்றொரு கருத்தாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், 4½ ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்பை படித்து தேர்வு எழுதி தொடர்ந்து ஒரு ஆண்டு ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வெளியே வரும் டாக்டர்கள், தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் மற்றொரு தேர்வை எழுதியபிறகுதான் டாக்டர் தொழில் செய்யமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இப்போது இந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். பாராளுமன்ற நிலைக்குழு டாக்டர்கள் கோரிக்கைகள் உள்பட அனைத்து பிரச்சினைகளையும் ஆழமாக ஆராய்ந்து விரைவில் அறிக்கை தரவேண்டும். அதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் விரிவாக விவாதித்து தகுந்த திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதுதான் அனைவருடைய நம்பிக்கையாக இருக்கிறது.

Next Story