அரசியல் களத்தில் 3 நடிகர்கள்


அரசியல் களத்தில் 3 நடிகர்கள்
x
தினத்தந்தி 13 Sep 2018 10:30 PM GMT (Updated: 13 Sep 2018 12:18 PM GMT)

தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால், காமராஜர், பக்தவத்சலம் ஆகியோருக்குப் பிறகு வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகியோர் சினிமா உலகத்தோடு தொடர்பு கொண்டவர்கள்தான்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும், கருணாநிதி உடல்நலக்குறைவால் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரத்திலும்தான், ரஜினிகாந்த், கமல்ஹாசன், இப்போது விஷால் என்று ஒவ்வொருவராக அரசியலில் எட்டிப்பார்க்க அடியெடுத்து வைக்கிறார்கள்.

ரஜினிகாந்த் 1996 சட்டமன்ற தேர்தலில், ‘அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது’ என்று சொல்லியதில் இருந்தே, இப்போது வந்து விடுவார், அப்போது வந்து விடுவார் என்று இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன. ‘லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வருவார்’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி அன்றுதான், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி, சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று உறுதிபட கூறினார். 8 மாதங்கள் கடந்த நிலையிலும், அவ்வப்போது அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அரசியல் கருத்துகளை பேசுகிறாரேதவிர, கட்சியை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் இப்போது சில நாட்களுக்கு முன்பு ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று மாற்றப்பட்ட அவரது ரசிகர்மன்ற நிர்வாக விதிகள் அடங்கியதாக 35 பக்கங்கள் கொண்ட ஒரு குறிப்பேட்டை அவர் வெளியிட்டுள்ளார். இந்த விதிகளையெல்லாம் பார்த்தால் ரசிகர்மன்ற விதிகளைப்போல தெரியவில்லை. ஒரு கட்சியின் உள்கட்டமைப்பு தொடர்பான விதிகள்போலவே தெரிகிறது. ஆக, அவர் கட்சி தொடங்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சியை தொடங்கி, அரசியல் ரீதியாக அவ்வப்போது தடாலடியாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ‘மக்கள் நீதி மய்யம்’ போட்டியிடும் என்று அறிவித்து விட்டார். இப்போது திடீரென்று நடிகர் விஷால் ‘மக்கள் நல இயக்கம்’ என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்துவிட்டு, இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறிவிட்டார். மேலும் சில நடிகர்களுக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அரசியலில் வெற்றிபெற்றார்கள் என்றால், அவர்கள் பாதை நீண்ட நெடியபாதை. எம்.ஜி.ஆர் ‘நாடோடி மன்னன்’ படத்திலிருந்து தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தி.மு.க. கொடியைக்காட்டி, கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு, கட்சி பொருளாளராக இருந்து கட்சியோடு தானும் வளர்ந்தார். ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரால் கட்சிக்கு கொண்டுவரப்பட்டு அவரால் வளர்க்கப்பட்டார். சினிமா உலகிலிருந்து எல்லோருமே அரசியலில் வெற்றிபெற்றதில்லை. ரசிகர்களாக இருந்தவர்கள் கட்சியில் சேராததுதான் அவர்களின் தோல்விக்கு காரணம். அதுபோல, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் கட்சி தொடங்கினாலும், பல கட்சிகளில் உள்ள அவர்களது ரசிகர்கள் அவர்களோடு வருவார்களா?, இல்லை... இல்லை... ரசிகர்களாகவே இருந்து விடுகிறோம், அரசியலில் வேண்டாம் என்று நினைக்கப் போகிறார்களா? என்று தேர்தலில் அந்த கட்சிகள் போட்டியிட்டபிறகுதான் தெரியும். மேலும் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் அரசியல் எதிர்இலக்காக தி.மு.க.வும், கலைஞரும்தான் இருந்தார்கள். இவர்களுக்கு அரசியல் எதிர்முகாம் யார் என்பதும், தனியாக நிற்கப்போகிறார்களா?, கூட்டணி அமைத்து போட்டியிடப்போகிறார்களா? என்பதும் தேர்தலின் போதுதான் தெரியும்.

Next Story