காலத்துக்கு ஏற்ற கல்வித்தொலைக்காட்சி


காலத்துக்கு  ஏற்ற கல்வித்தொலைக்காட்சி
x
தினத்தந்தி 27 Aug 2019 10:30 PM GMT (Updated: 27 Aug 2019 3:04 PM GMT)

பொதுவாக வீடுகளிலும் சரி, பள்ளிக்கூடங்களிலும் சரி, குறிப்பாக பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களை டெலிவி‌ஷன் பார்க்காதே படிப்பில் இருந்து உன் கவனம் சிதறிவிடும் என்று எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். இன்னும் ஒருபடி மேலே போனால் சில வீடுகளில் கேபிள் டி.வி. இணைப்பைக்கூட துண்டித்துவிடுவார்கள். ஆனால், அந்த நிலையெல்லாம் தமிழ்நாட்டில் இனி மாறப்போகிறது.

மாணவர்களை அரசு கேபிள் மூலம் ஒளிபரப்பச் செய்யும் தமிழக அரசின் கல்வித்தொலைக்காட்சியை பார்க்கச்சொல்லி ஆசிரியர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தப்போகிறார்கள். நமது கல்வித்திட்டத்தில் பல திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக நிறைவேற்றப்பட்டு, மற்ற மாநிலங்கள் எல்லாம் பின்பற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. 

இந்தநிலையில், மீண்டும் ஒரு முத்திரை பதிக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசுதான் கல்வித்தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது. முழுக்க முழுக்க மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் கல்வித்தொலைக்காட்சி அரசு கேபிளில் 200–வது அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் கல்விசார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள இந்த கல்வித்தொலைக்காட்சி, வெகுவிரைவில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு வகுப்பு பள்ளிக்கூட மாணவர்கள் பயனடையும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருக்கிறது. நிகழ்ச்சிகளின் தலைப்புகளை பார்த்தால் வித்தியாசமாக இருக்கிறது. காலை 10 மணிக்கு ஒளிபரப்பப்போகும் ‘பாடுவோம் படிப்போம்’ நிகழ்ச்சியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படும். 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கவிதை பேழை’ நிகழ்ச்சியில் 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழும், ஆங்கிலமும் கற்றுக்கொடுக்கப்படும். 11 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘ஆய்வுக்கூடம்’ நிகழ்ச்சியில் 6 முதல் 10–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியலும், 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘ஆங்கிலம் பழகுவோம்’ நிகழ்ச்சியில் ஆங்கிலம் சரளமாக பேசவும், 2 மணிக்கு ‘முப்பரிமாணம்’ நிகழ்ச்சியில் பிளஸ்–2 மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணக்கு பாடங்களும், 4 மணிக்கு ‘யாமறிந்த மொழிகள்’ நிகழ்ச்சியில் பிளஸ்–2 மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என ஒவ்வொரு ½ மணிநேரமும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் பயனடையும் வகையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட இருக்கின்றன. 

இதுமட்டுமல்லாமல், நீட், ஐ.ஐ.டி. போன்ற தேர்வுகளுக்கான பயிற்சிகள் இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ‘வாகை சூடவா’ என்ற பெயரில் ஒளிபரப்பப்படும். அடுத்த சிலநாட்களில் இந்த ஒளிபரப்பு முழுஅளவில் தொடங்கப்படும். இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மாணவர்கள் பார்க்கும் வகையில், 34 ஆயிரம் பள்ளிக்கூடங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக வாடகைக்கு டெலிவி‌ஷன்கள் வாங்கப்பட்டு வருகின்றன என்றும், விரைவில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் அரசு கேபிள் டி.வி. இணைப்போடு டெலிவி‌ஷன்கள் வாங்கித்தரப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கல்வித்துறை எடுத்த இந்த முயற்சி நிச்சயமாக பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது. ஆனால், அந்தந்த வகுப்பு மாணவர்களுக்காக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் பள்ளிக்கூட கால அட்டவணை வகுக்கப்படவேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்–டாப்களிலும் அவர்கள் பார்த்துக்கொள்ளும் வகையில் வசதிகள் அளிக்கப்படவேண்டும். தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் பயனுள்ள நிகழ்ச்சிகளாக, ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பொறுப்பும் கல்வித்துறையிடம் உள்ளது.

Next Story