பூச்சாண்டி காட்டுகிறாரா இம்ரான்கான்?


பூச்சாண்டி காட்டுகிறாரா இம்ரான்கான்?
x
தினத்தந்தி 29 Aug 2019 11:00 PM GMT (Updated: 29 Aug 2019 3:19 PM GMT)

நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் அட்டகாசம் குறையவில்லை.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, அவர்கள் மீதும், அவர்களுக்கு உதவுகிறவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையையும், பயங்கரவாதத்தை தடுக்க முடியாத சூழ்நிலையையும் உருவாக்கி வந்தது. இந்தநிலையில், பா.ஜ.க. அரசாங்கம் கடந்த 5, 6–ந்தேதிகளில் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் அறிமுகப்படுத்திய மசோதாக்கள் மூலம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு–காஷ்மீர் என்று சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படுகிறது. சிறப்பு அந்தஸ்து மூலம் காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த தனி கொடி ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து இறக்கப்பட்டு, தேசிய கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது. 

இந்தியா இப்படியொரு நல்ல பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பூச்சாண்டி காட்டுகிறார். தனது அரசாங்கம் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தும்வரை, காஷ்மீர் மக்களோடு துணைநிற்கும் என்று உறுதி அளித்து இருக்கிறார். பாகிஸ்தான் நாட்டு மக்கள் வாரம் ஒருமுறை காஷ்மீர் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், மோடி ஒரு வரலாற்று பிழை செய்துவிட்டார். இந்த வி‌ஷயத்தை அடுத்தமாதம் நடக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் நான் எழுப்புவேன். காஷ்மீருக்கான தூதராக நான் செயல்படுவேன் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், இந்தியா–பாகிஸ்தான் இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அணு ஆயுதப்போரில் யாரும் வெற்றி அடைவதில்லை. அந்த பகுதிக்கு மட்டும் அது பேரழிவுகளை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல், உலகம் முழுவதும் அதன் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, சர்வதேச நாடுகள்தான் இப்போது இதுபற்றி முடிவெடுக்கவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், இந்திய விமானங்கள், பாகிஸ்தான் வான்வழியில் பறப்பதையும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தரைவழி மூலமாக ஆப்கானிஸ்தானுக்கு வர்த்தக பொருட்கள் செல்வதையும் முழுமையாக தடுக்க பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் மிரட்டி இருக்கிறார். 

வான்வழியை தடுத்தால், நமது விமானங்கள் உலகின் பல பகுதிகளுக்கு செல்ல கூடுதலாக நேரம் செலவழிக்க வேண்டியதிருக்கும். கூடுதல் தூரம் என்பதால் எரிபொருளும் அதிகம் செலவாகும். இதுபோல, ஆப்கானிஸ்தான் வர்த்தகத்துக்கும் பாதிப்பும் ஏற்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானுக்கும் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். இம்ரான்கானின் நடவடிக்கைக்கு பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகளே ஆதரவாக இல்லை. காஷ்மீர் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறுகிறது. இந்தியா நிச்சயமாக பாகிஸ்தானின் பூச்சாண்டி மிரட்டலுக்கு பயப்படாது. பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்தாலும், மத்திய அரசு அதையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொள்ளவேண்டும். ஒரு நடவடிக்கையை எடுத்துவிட்டோம். பெரும்பாலான சர்வதேச நாடுகளும், குறிப்பாக அரபு நாடுகளும் ஆதரவாக இருக்கும்நிலையில், மத்திய அரசாங்கம் எல்லாவற்றையும் எதிர்கொள்ளவேண்டும். வெளிவிவகாரத்துறை செயலாளராக இருந்த தமிழர் ஜெய்சங்கர், இப்போது மந்திரியாகியுள்ள சூழ்நிலையில், இந்தநிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்வார். நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் இந்தநேரத்தில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்தால்தான், அரசாங்கத்தின் கரம் வலுப்பெறும்.

Next Story