உங்கள் பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?


உங்கள் பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 5:02 PM GMT)

ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை நாட்டு மக்கள் அனைவரும் பெரிதும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் தொழில்அதிபர்கள், அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் உள்பட பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆண்டு பட்ஜெட் மற்ற ஆண்டுகளைவிட, ஒரு வித்தியாசமான பட்ஜெட்டாக இருக்கும். ஏனெனில், பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. பல பொருட்களின் விலைவாசி கிடுகிடுவென்று உயர்ந்துவிட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு என்று பல பிரச்சினைகள் சுற்றிச்சுற்றி வருகின்றன.

சர்வதேச பிரச்சினைகள் வேறு. மேலும் ரூபாய் மதிப்பு குறைந்து வருகிறது. இப்படி பல பிரச்சினைகளுக்கு மத்திய அரசாங்கம் எவ்வாறு தீர்வு காணப்போகிறது? என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். இதேபோல் சரக்கு சேவை வரி, வருமான வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் இருக்கின்றன. இப்படி பல பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களிடம் பிரதமர் உங்கள் ஆலோசனைகளை அரசுக்கு தெரிவியுங்கள் என்று கேட்டு இருக்கிறார். 130 கோடி மக்களின் ஆலோசனைகளையும் பிரதமர் கேட்பது நிச்சயமாக வரவேற்புக்குரியது ஆகும். மத்திய பட்ஜெட் என்பது 130 கோடி இந்திய மக்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாகும். இந்தியாவின் வளர்ச்சிக்கு பட்ஜெட்தான் பாதை அமைக்கிறது. எனவே, MyGov என்ற இணையதளத்தில் மக்கள் தங்கள் எண்ணங்களையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகள், கல்வி மற்றும் பல பிரச்சினைகள் குறித்து உங்கள் மேலான ஆலோசனைகளையும் 20-ந்தேதிக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். MyGov இணையதளத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஜனநாயக முறையில் ஒரு அங்கம் வகிக்க வரவழைக்கப்படுகிறார்கள் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுபோல இணையதளத்தில், சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டர் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்க முடியும். டுவிட்டரில் ஆலோசனைகளை வழங்குபவர்கள் ஒவ்வொரு துறைக்கான ஆலோசனைகளையும் தனித்தனியாக வழங்கலாம். அதற்காக ஹாஷ்டாக்குகளை பயன்படுத்தி ஆலோசனைகளை தரலாம். குறிப்பாக வருமான வரி சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை #IncomeTax, நிதித்துறை தொடர்பாக #Finance, விவசாயம் பற்றி #Agriculture, மருத்துவம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை #Health, கல்வி சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை #Education, சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை #Environment, நீர் பராமரிப்பு பற்றி #WaterConservation, சரக்கு சேவை வரி சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை #GST, வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை #Employment, தொழில் முனைவோர் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை #Entrepreneurship, ரெயில்வே சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை #Railways, உள்கட்டமைப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை #Infrastructure, மற்ற ஆலோசனைகளை #Others போன்ற ஹாஷ்டாக்குகளை பயன்படுத்தி மக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். அதை ஹாஷ்டாக்கில் சேர்த்து விடவேண்டும். பிரதமர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டவுடனேயே பல மாநிலங்களில் இருந்து ஆலோசனைகள் போய் குவியத் தொடங்கிவிட்டன. தமிழக மக்களும் தங்கள் கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசுக்கு தெரிவிக்க வேண்டும். மக்களிடம் இருந்து எந்த பொருள் குறித்து அதிக கோரிக்கைகள் வருகிறதோ, அதை நிச்சயமாக அரசால் தட்டமுடியாது. எனவே, இப்போது மக்கள் எடுக்கப்போகும் நடவடிக்கையில்தான் அரசு கவனத்தை ஈர்க்க முடியும். எனவே, இதுதான் எங்களுக்கு வேண்டும் என்று நினைக்கும் பொதுமக்கள் பிரதமரின் அழைப்பை ஏற்று, மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு தங்கள் கோரிக்கைகளை கொண்டு செல்லும் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது. 

Next Story