இடஒதுக்கீடு நீர்த்துபோய் விடக்கூடாது!


இடஒதுக்கீடு நீர்த்துபோய் விடக்கூடாது!
x
தினத்தந்தி 4 Jun 2020 1:06 AM GMT (Updated: 4 Jun 2020 1:06 AM GMT)

இடஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் மாநில தொகுப்புக்கு வழங்கும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் நடைமுறைப்படுத்த மத்திய அரசாங்கத்தின் கதவுகளை தமிழக அரசு தொடர்ந்து தட்டவேண்டும்.

தற்போது நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. இதில், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 85 சதவீத மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு தலா 50 சதவீதம்,18 சதவீதம், 1 சதவீதம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு நடைபெறுகிறது. மீதமுள்ள, 15 சதவீதம் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

இதுபோக,முதுகலை மருத்துவ படிப்புகான நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான 50 சதவீத இடங்களும் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்கள், மத்திய அரசாங்கம் நடத்தும் கல்லூரிகள் மற்றும் அதன் உதவியோடு நடக்கும் கல்லூரிகளுக்கும், மாநில அரசுகள் நடத்தும் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதில், மத்திய அரசாங்கக் கல்லூரிகளில் மட்டும் இடஒதுக்கீட்டை அனுமதித்துவிட்டு, மாநில அரசுகள் நடத்தும், முதுகலை மற்றும் இளங்கலை மருத்துவப்படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீடு மத்திய அரசால் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

இதை எதிர்த்து, காணொலி காட்சி மூலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, மருத்துவப்படிப்புக்கான இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை உள்நோக்கத்துடன் மறுத்துவரும் மத்திய அரசுக்கு அனைத்து கட்சிகளின் இந்தக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது என்றும், உடனடியாக இந்த இடஒதுக்கீட்டை எந்த குறைபாடுமின்றி செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதோடு விட்டுவிடாமல்,தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வழக்குப் போடப்போவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மருத்துவ கல்லூரி இடங்களில் 50 சதவீத இடத்தை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு என்பது தமிழக மக்களின் மூச்சில் கலந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. நீதிக்கட்சி சார்பில் நடந்த போராட்டத்தின் விளைவாக, 1928-ம் ஆண்டு டாக்டர் சுப்பராயன் சென்னை மாகாண பிரதமராக இருந்த நேரத்தில், மந்திரியாக இருந்த முத்தையா முதலியாரால், வகுப்புவாரி உரிமை ஆணையென்று இடஒதுக்கீட்டுக்காக பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, தந்தை பெரியார் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஓமந்தூரார் முதல்-அமைச்சராக இருந்து, பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த நேரத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 16 சதவீதம் என்று இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டது.எம்.ஜி.ஆர். ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என்று 69 சதவீத இடஒதுக்கீடாக உயர்த்தப்பட்டது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இதற்காக தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்திலும் 9வது அட்டவணை பாதுகாப்புடன் அரசியல் சட்டத்தை திருத்த வைத்தார்.

இப்படி தந்தை பெரியார் முதல் தமிழ்நாட்டில் அனைத்து தலைவர்களும் போராடி பெற்ற உரிமை இப்போது பறிபோய்விடக்கூடாது. இடஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் மாநில தொகுப்புக்கு வழங்கும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் நடைமுறைப்படுத்த மத்திய அரசாங்கத்தின் கதவுகளை தமிழக அரசு தொடர்ந்து தட்டவேண்டும்.

நீதிமன்றங்களிலும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட வேண்டும். மொத்தத்தில் வகுப்புவாரிஇடஒதுக்கீட்டு உரிமை சமூக நீதி நீர்த்து போய்விட தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

Next Story