பாடத்திட்டத்தை குறைப்பதே சாலச்சிறந்தது!


பாடத்திட்டத்தை குறைப்பதே சாலச்சிறந்தது!
x
தினத்தந்தி 17 July 2020 12:16 AM GMT (Updated: 17 July 2020 12:16 AM GMT)

கொரோனா பாதிப்பால் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. ஜூலை மாதம் 17-ந்தேதி ஆகிவிட்டது. கல்வியாண்டும் தொடங்கி, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் பணிகளும் தொடங்கிவிட்டன.

கொரோனா பாதிப்பால் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. ஜூலை மாதம் 17-ந்தேதி ஆகிவிட்டது. கல்வியாண்டும் தொடங்கி, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் பணிகளும் தொடங்கிவிட்டன. பல தனியார் பள்ளிக்கூடங்களில் ‘ஆன்-லைன்’ மூலம் ஏற்கனவே வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தநிலையில், தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் 2-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். இதில், 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு 30 நிமிடங்கள் மட்டும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மற்ற வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு 1 மணி நேரம் முதல் அதிகபட்சம் 2.30 மணி நேரம்வரை தினமும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இதேபோல, ‘ஆன்லைன்’ மூலம் கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடங்கள் எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற வகுப்புகளுக்கு 30 நிமிடங்களும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஒரு வகுப்பு என்ற வகையில், தினமும் 2 முறையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒரு வகுப்பு 30 முதல் 45 நிமிடங்கள் என்ற வகையில், 4 முறையும் கற்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் இடைவெளி 10 முதல் 15 நிமிடங்கள் இருக்கவேண்டும்.

மாணவர்கள் வெகுநேரம் டி.வி.யையோ, ‘லேப்டாப்’ திரையையோ, செல்போனையோ தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால், கண்கள் பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவர்கள் ஆலோசனைகூறும் நிலையில், இவ்வாறு குறுகிய நேரம் வகுப்புகள், 15 நிமிட இடைவெளி என்றெல்லாம் அறிவித்திருப்பது மிகமிக வரவேற்கத்தக்கதாகும். ஆக, மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் போய் கல்வி கற்கும் நேரத்தைவிட, ‘ஆன்லைன்’ மூலமும், கல்வித் தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்கும் நேரம் குறைவு என்ற வகையில், இந்த கல்வியாண்டுக்குரிய ஒவ்வொரு பாடத்துக்குமான கல்வி திட்டத்தின்படி பாடங்களை படித்து முடிக்க முடியாது.

எனவே, சி.பி.எஸ்.இ. என்று சொல்லப்படும் மத்திய செகண்டரி கல்வி வாரியம், இந்த ஆண்டு மட்டும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை எந்தவகையில், குறைக்கலாம் என்று கல்வியாளர்களிடம் இருந்து ஆலோசனைகளை கோரியிருந்தது. 1,500-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் வந்தநிலையில், அதையெல்லாம் பரிசீலித்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவித்து, எந்தெந்த பாடங்களில் என்னென்ன பகுதிகள் இந்த ஆண்டு படிக்கத் தேவையில்லை என்பதற்கான, ஒரு விரிவான விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படிதான் இப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு மிகமிக வரவேற்கத்தக்கதாகும். தமிழ்நாட்டிலும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறந்து நேரடியாக ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதால், உடனடியாக சி.பி.எஸ்.இ. போல பாடத்திட்டத்தை குறைக்கவேண்டும் என்று மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டன.

ஐ.ஏ.எஸ். அதிகாரி சிஜி தாமஸ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்தக்குழுவும் தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. தமிழக கல்வித்துறையும் உடனடியாக இந்த அறிக்கையை பரிசீலித்து கல்வியாளர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகள், ஆசிரியர்களோடு கலந்து ஆலோசித்து எந்தெந்த வகுப்புகளுக்கு, எந்தெந்த பாடங்களை குறைக்கலாம்? என்ற அறிவிப்பை வெளியிடவேண்டும். இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட தொடங்கி, கல்வி தொலைக்காட்சியில் வகுப்புகளும் தொடங்கப்பட்ட நேரத்தில், அரசு குறைக்க முடிவெடுத்து அறிவிக்கப்போகும் பாடங்களையும், தேவையில்லாமல் படித்துக் கொண்டிருக்கவோ, கற்பிக்கவோ வேண்டியநிலை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். 

Next Story