திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்!


திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்!
x
தினத்தந்தி 19 July 2020 11:49 PM GMT (Updated: 19 July 2020 11:49 PM GMT)

பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மீது அதிக அன்பு கொண்டவர். தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தாலும், அவர் தனது பேச்சின் தொடக்கத்திலும், இறுதியிலும் வணக்கம், நன்றி என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசுவதும் உண்டு.

பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மீது அதிக அன்பு கொண்டவர். தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தாலும், அவர் தனது பேச்சின் தொடக்கத்திலும், இறுதியிலும் வணக்கம், நன்றி என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசுவதும் உண்டு. அதேபோல, “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு“ என்று பாரதி பாடினாரே, அந்த திருவள்ளுவர் தந்த குறளை ஒவ்வொரு தமிழனும் மகிழ்ச்சியடைய தக்க வகையில், பல கருத்தரங்குகளிலும், பொதுக்கூட்டங்களிலும் அவர் ஆற்றும் உரைகளில் மேற்கோளாக காட்டுவது உண்டு. ஈரடிகளில் எல்லா பொருட்களையும் உள்ளடக்கியுள்ள திருக்குறளை அந்தந்த கூட்டத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கூறுவது அவரது வழக்கம்.

சில நாட்களுக்கு முன்பு பதற்றமான கிழக்கு லடாக் பகுதிக்கு சென்று ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு“ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி, ஒவ்வொரு ராணுவ வீரரையும் உற்சாகப்படுத்தியதுடன், உத்வேகத்தையும் ஏற்படுத்தினார். அதுபோல, கடந்த வாரம் வியாழக்கிழமை டுவிட்டரில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் திருக்குறளை மேன்மைப்படுத்தி, பதிவுகளை வெளியிட்டார். “திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னத குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள் நம்பிக்கையையும், ஒளிபரப்பும் வல்லமையும் வாய்ந்தவை. இந்தியா முழுவதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்து பயன்பெறுவர் என நம்புகிறேன்“ என்று பதிவிட்டு இருந்தது ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் பூரிப்பை ஏற்படுத்துகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் 1,330 குறள்களை ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 133 அதிகாரங்களில் அடக்கித் தந்திருக்கிறார். இந்த உலகக்கவி ஈரடிகளில் உலகை அளந்த ஞானப்புலவர். உலகில் ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு புனிதநூல் உண்டு. இந்துக்களுக்கு பகவத்கீதை, கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குரான், சீக்கியர்களுக்கு குரு கிரந்த் சாகிப் என்று இருந்தாலும், எல்லா நாட்டுக்கும், மதத்திற்கும், மொழிக்கும், இனத்திற்கும் பொருந்தக்கூடிய பொதுவான மறை நூலாக இருப்பது திருக்குறள்.

திருக்குறளின் புகழைப்பாட கலைஞர் கருணாநிதி எழுதிய குறளோவியம் நூலில், அக்கால புலவர் கபிலர், குறளின் பெருமையை கூற வரும்போது, “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்....“ என்று கூறியுள்ளார். அதாவது, காலை நேரம், கபிலர், பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார். தரையுடன் ஒட்டி கிடக்கும் அந்த சிறிய புல்லின் நுனியில், தினையின் அளவைக் காட்டிலும் குறைவான ஒரு பனித்துளியையும் அவர் காண்கிறார். பனித்துளியை உற்றுநோக்குகிறார். அந்த பனித்துளியின் அளவுக்குள்ளே, ஆங்கருகே ஓங்கி உயர்ந்து நிற்கும் பனைமரம் முழுவதும் தெரிகிறது!. அந்தக் காட்சி கபிலரை கற்பனை சிறகடித்து பறக்கச் செய்கிறது!. “ஆகா!, ஒரு சிறு பனித்துளிக்குள்ளே பக்கத்தேயுள்ள பனைமரம் முழுவதும் தெரிகின்றதே, இதே போலத்தான் வள்ளுவனின் குறட்பாவுக்குள்ளும் இந்த வையகத்துக்குத் தேவையான பெரும் பொருள் பொதிந்து கிடக்கிறது என்கிறார்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட பெரும் புகழ்வாய்ந்த திருக்குறளையும், திருவள்ளுவரையும் பிரதமர் கொண்டாடுவது, ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமையளிக்கிறது. திருக்குறள் மீது அவருக்கு தீராத காதல் இருப்பதால் தமிழர்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது அரசியல் சட்டத்தில் எழுதப்பட்டுள்ள பிரகடனம் ஆகும். திருக்குறளும் ஒரு மதச்சார்பற்ற நூல் என்பது பெரும்பாலானோர் கருத்து. மதச்சார்பற்ற இந்த நாட்டுக்கு, மதச்சார்பற்ற ஞான நூலான திருக்குறளை தேசிய நூலாக, திருக்குறள் மீது மெய்யன்பு கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்து தமிழர்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே செம்மொழியான தமிழ்மொழியை பேசும் தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது. 

Next Story