வெளிநாட்டு தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள்!


வெளிநாட்டு தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள்!
x
தினத்தந்தி 24 July 2020 9:30 PM GMT (Updated: 24 July 2020 5:50 PM GMT)

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வேலைபார்த்து அங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் சீர்குலைந்த பொருளாதாரத்தின் காரணமாக தாய்பூமிக்கு திரும்பும் தமிழர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கொரோனா தொற்று தாக்குதல் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசுக்கு அதைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மட்டுமல்லாமல், வீழ்ந்து கிடக்கும் பொருளாதார நிலையை சீர்படுத்துவது, ஏராளமான வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்க வேண்டிய கட்டாயம் என்று, பல பணிகள் அடுக்கடுக்காக முன் நிற்கின்றன. வேலைவாய்ப்புகளை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வேலைபார்த்து அங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் சீர்குலைந்த பொருளாதாரத்தின் காரணமாக தாய்பூமிக்கு திரும்பும் தமிழர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில், கிராமங்களில் தச்சுவேலை, கட்டிடவேலை, மண்வெட்டி, கோடாரி, அரிவாள், கத்தி போன்ற உபகரணங்களை தயாரிக்கும் வேலை என்று பல சிறு சிறு வேலைகளுக்கு தனித்தனியாக தொழிலாளர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு எல்லாம் போதிய கல்வியும் இருக்காது, வருமானமும் இருக்காது. வறுமைக்கோட்டுக்கு கீழ்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்தநேரத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு, “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு“ என்ற பழமொழிக்கேற்ப, அரபு நாடுகளில் இவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இருந்ததையொட்டி, தங்கள் கையில் இருந்ததை எல்லாம் விற்று, கடன்வாங்கி ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றனர். அங்கு இவர்கள் மோட்டார் வாகன டிரைவர்கள், வீட்டுவேலை பணியாளர்கள், தோட்ட வேலை செய்வோர், கட்டிடவேலை செய்வோர், பிளம்பர், வெல்டர், எலக்ட்ரீசியன், மீன்பிடி தொழில் என்பது போன்ற பணிகளை செய்து ஏராளமாக சம்பாதித்தார்கள்.

இதனால், எந்த ஊரில் வறுமையில் வாடினார்களோ, அந்த ஊர்களிலேயே சொந்த வீடுகட்டி, அவர்கள் குடும்பம் எல்லாம் வளமான நிலையில் வாழ முடிந்தது. இத்தகைய சூழ்நிலையில், அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் விலை குறைவு, கொரோனா பாதிப்பு ஆகியவற்றால், பொருளாதாரம் சீர்குலைந்து அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டினரை, வேலையில்லை என்று சொல்லி, வீட்டுக்கு அனுப்பும் முயற்சி தொடங்கிவிட்டது.

அரபு நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில், தாய்நாட்டிற்கே முன்னுரிமை கொடுக்கத் தொடங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தநிலையில், குவைத் நாட்டில் இருந்து ஏராளமான தமிழர்கள் வேலையிழந்து வீட்டுக்கு வரப்போகும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அந்த நாட்டில், மொத்த மக்கள்தொகை 43 லட்சம். இதில் குவைத் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சம். மீதமுள்ள 30 லட்சம் பேர் வெளிநாட்டினர். தற்போது, 70 சதவீதம் வெளிநாட்டினர் இருக்கும் சூழ்நிலையில், இதை 30 சதவீதமாக குறைக்கவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த 30 லட்சம் வெளிநாட்டினரில், 14 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்தியர்கள்தான். இந்தியர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற முடிவின் அடிப்படையில், 8 லட்சம் இந்தியர்களை வீட்டுக்கு அனுப்ப குவைத் அரசு முடிவெடுத்துள்ளது. இந்த 8 லட்சம் பேரையும் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அனுப்பப்போகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவையும், தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள்தான். கேரளாவில், இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வேலையில்லாமல் திரும்புபவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான திட்டங்களை தொடங்கிவிட்டனர். தங்கள் நாட்டில் பொருளாதார நிலையை சீர்படுத்த எவ்வாறு அரபு நாடுகள் உள்பட வெளிநாடுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறதோ, அதுபோல தமிழக அரசும் வெளிநாட்டில் வேலையிழந்து தாய்நாடு திரும்பும் தமிழர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இதற்கு, கிராம உள்கட்டமைப்போடு, விவசாயம் தொடர்பான தொழில்களை புதிதாக உருவாக்கி இணைக்கும் முயற்சிகளை அதிகமாக தொடங்க வேண்டும். வெளிநாடுகளில் அவர்கள் பார்த்த வேலைகளையே தமிழ்நாட்டிலும் தொடரும் வகையில் அதற்குரிய வேலைவாய்ப்புகள் கொண்ட தொழில்களை உருவாக்க முனைப்பான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். “வெளிநாடுகளில் வளமாக வாழ்ந்தோம், தமிழ்நாட்டில் தாழ்ந்துவிட்டோம்” என்ற நிலைமை யாருக்கும் வந்துவிடக்கூடாது.

Next Story