மீனவர்கள் பிரச்சினைக்கு இதுதான் நிரந்தர தீர்வு!


மீனவர்கள் பிரச்சினைக்கு இதுதான் நிரந்தர தீர்வு!
x
தினத்தந்தி 11 Jan 2021 11:19 PM GMT (Updated: 11 Jan 2021 11:19 PM GMT)

தமிழக மீனவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை என்பது, கடலில் ஆர்ப்பரித்து எழும் அலைகளைவிட, கொந்தளிக்கும் கடலைவிட, கடும் புயல்-மழையைவிட, இலங்கை கடற்படையால்தான் ஏற்படுகிறது.

தமிழக மீனவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை என்பது, கடலில் ஆர்ப்பரித்து எழும் அலைகளைவிட, கொந்தளிக்கும் கடலைவிட, கடும் புயல்-மழையைவிட, இலங்கை கடற்படையால்தான் ஏற்படுகிறது. கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், அடிக்கடி சர்வதேச கடல் எல்லையை தாண்டி, தங்கள் பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள் என்று இலங்கை கடற்படையினர், படகுகளோடு அவர்களை கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்துவிடு கிறார்கள். உடனடியாக தமிழகத்திலிருந்து கண்டனக்குரல் எழுப்பப்படுகிறது. தமிழக அரசும், மத்திய அரசாங்கத் திடம் கோரிக்கை விடுத்து, தூதரக உறவுகள் மூலமாக, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்து கொண்டுவந்துவிடுகிறது. ஆனால், படகுகளை பெரும் பாலும் இலங்கை அரசாங்கம் திருப்பிக்கொடுக்காத நிலை யில், பராமரிப்பின்றி பழுதடைந்து பயனற்றதாகி விடுகிறது.

கடந்த மாதம் 17-ந்தேதிகூட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து 5 எந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 36 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றுவிட்டது. படகுகளுடன் அவர்களை மீட்டுத்தர வேண்டும்” என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த சம்பவம் நடந்த 6 நாட்களில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற 4 மீனவர்களையும், இப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், மேலும் சில படகுகளை பாட்டில், கற்களை வீசி தாக்கி சேதப்படுத்தியுள்ளது. மொத்தம் 52 மீனவர்கள் இலங்கை சிறையில் தற்போது இருக்கிறார்கள்.

சமீபத்தில் 13 படகுகள் சிக்கியுள்ள நிலையில், ஏற்கனவே கைப்பற்றப்பட்ட 150-க்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கையில் பராமரிப்பின்றி நிற்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்யவும், படகுகளை திருப்பித்தரவும் மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இந்தநிலையை தவிர்க்கவேண்டுமென்றால், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ராமேசுவரத்தில், பிரதமர் நரேந்திரமோடி, “அடுத்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரம் மீன்பிடி படகுகள் ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றப்படும்” என்று அறிவித்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால்தான் முடியும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கட்டுவதற்கான விலையில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 20 சதவீதத்தை தமிழக அரசும் தரும். மீதமுள்ள 30 சதவீத தொகையில், மீனவர்கள் பங்களிப்பாக 10 சதவீதமும், 20 சதவீதம் வங்கிக்கடனாகவும் பெறவேண்டும். வங்கிக்கடனை பெறுவதற்கு உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-2018-ம் ஆண்டிலேயே இவ்வாறு 500 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 39 படகுகள்தான் வழங்கப்பட்டுள்ளன. 689 விண்ணப்பங்கள்தான் பெறப்பட்டுள்ளன. 100 பயனாளிகளுக்கு வழங்கத்தான் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 96 படகு களுக்குத்தான் பணியாணை வழங்கப்பட்டுள்ளது. கடலில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க சென்றுவிட்டு, இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் இல்லாமல், தங்கள் தொழிலை செய்யவேண்டும் என்றால், இனி ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மூலமாக தொலைதூரங்களுக்கு சென்று மீன்பிடித்தால்தான் முடியும்.

பிரதமர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தபோது, 3 ஆண்டுகளுக்குள் 2 ஆயிரம் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2½ ஆண்டுகள் ஆகியும் 39 படகுகள்தான் வழங்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை டிசைன் செய்வதற்கு ஏற்பட்ட தாமதம்தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், இந்த ஆண்டிலாவது எந்திரப்படகு வேகத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்தி 2 ஆயிரம் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மீனவர்கள் வாங்க ஊக்கப்படுத்தி, இலங்கை கடற்படைக்கு வேலையில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். மேலும், இப்போது படகுகள் கட்டுவதற்கான செலவும் அதிகமாகிவிட்ட சூழ்நிலையில், அதற்கேற்ற வகையில் மீனவர்களுக்கு உதவ வேண்டும்.

Next Story