தமிழக எம்.பி.க்கள் இல்லாமல் நிறைவேறிய மசோதா


தமிழக எம்.பி.க்கள் இல்லாமல் நிறைவேறிய மசோதா
x
தினத்தந்தி 31 March 2021 9:13 PM GMT (Updated: 31 March 2021 9:13 PM GMT)

நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டில் பட்டியலினத்திலுள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாரி ஆகிய சாதிகளை உள்ளடக்கி, “தேவேந்திர குல வேளாளர்” என்ற ஒரே பெயரில் பொது பெயரிட கோரி அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டில் பட்டியலினத்திலுள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாரி ஆகிய சாதிகளை உள்ளடக்கி, “தேவேந்திர குல வேளாளர்” என்ற ஒரே பெயரில் பொது பெயரிட கோரி அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதைத்தொடர்ந்து இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, அரசுக்கு பரிந்துரை அளிக்க, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ்வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அந்த 6 உட்பிரிவு சாதிகளோடு வாதிரியான் என்ற உட்பிரிவு சாதியையும் இணைத்து ஒரேசாதியாக “தேவேந்திர குல வேளாளர்” என பொது பெயரிட பரிந்துரைத்தது. தமிழக அரசு இதை ஏற்றுக்கொண்டு பிப்ரவரி 2-ந்தேதி ஒரு ஆணையும் பிறப்பித்தது.

சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14-ந்தேதி தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திரமோடி அந்த விழாவில் பேசும்போது, “தமிழக தேவேந்திர குல வேளாளர் சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு தெரிவிக்க என்னிடம் ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு உள்ளது. அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 6, 7 பெயர்களில் அல்லாத பாரம்பரியமான பெயரில் அவர்கள் இனி அழைக்கப்படுவார்கள். ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று பெயர் திருத்தம் செய்ய அரசியல் சட்டத்தை திருத்தும் வரைவு அரசாணைக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்டது. நாடாளுமன்றத்தில் இது தாக்கல்செய்யப்படும். டெல்லியில் 2015-ம் ஆண்டு தேவேந்திரர்களின் பிரதிநிதிகளை நான் சந்தித்தபோது, அவர்களிடம் நான் ஒன்றை சொன்னேன். ‘நீங்கள் தேவேந்திரா, நான் நரேந்திரா’ என்று கூறினேன்” என தெரிவித்தார்.

தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசியல் அமைப்புச்சட்டம் 1950, பிரிவு 341-ன் கீழ் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை கேட்டுக்கொண்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்பேரில், அரசியல் சட்டத்திருத்த மசோதா (தாழ்த்தப்பட்டோர் பிரிவு) மக்களவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மிக மிக முக்கியமான இந்த விவாதத்தில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ளவில்லை. இந்த மசோதா நிறைவேறுவதற்கு நடந்த குரல் வாக்கெடுப்பில் தமிழக எம்.பி.க்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது ஒரு குறையாக இருக்கிறது. இந்த மசோதா மீது நடந்த விவாதத்தில், பா.ஜ.க., சிவசேனா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டு பேசினர். இந்த மசோதாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளிலுள்ள கடையன் பிரிவினர் மட்டும் தேவேந்திர குல வேளாளர் பிரிவில் சேர்க்கப்படவில்லை. மீனவர்களான அவர்கள் “தேவேந்திர குல வேளாளர்” பிரிவுக்கு வர விருப்பம் இல்லை என்று கூறிவிட்டதால், அவர்கள் இந்த பிரிவில் சேர்க்கப்படவில்லை என்று மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது.

மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார். ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற பிறகு, இவர்கள் இனி “தேவேந்திர குல வேளாளர்” என்றே அழைக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் அனைத்து சான்றிதழ்களிலும், அரசின் பதிவேடுகளிலும் “தேவேந்திர குல வேளாளர்” என்றே பெயர் இடம்பெற்றிருக்கும். ஆனால், இதுவரையில் இந்த உட்பிரிவுகளின் சாதிகள் பெயர் இடம்பெற்றுள்ள சாதி சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்ற சான்றிதழ்களில், அந்த உட்பிரிவுகளின் சாதிகள் பெயர் மட்டுமே இருக்கும் என்ற வகையில், அதை “தேவேந்திர குல வேளாளர்” என்று மாற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்படவேண்டும். ஏனெனில் இனி எல்லா சலுகைகளும் “தேவேந்திர குல வேளாளர்” என்ற பெயரிலேயே வழங்கப்படும் என்பதால், இந்த சான்றிதழ்களிலும் அவ்வாறு பெயர் மாற்றம் செய்யவேண்டியது அவசர அவசியம் ஆகிறது.

Next Story