12 மணி நேரத்தில் சரிசெய்த நிர்மலா சீதாராமன்!


12 மணி நேரத்தில் சரிசெய்த நிர்மலா சீதாராமன்!
x
தினத்தந்தி 4 April 2021 9:28 PM GMT (Updated: 4 April 2021 9:28 PM GMT)

கடந்த 1-ந்தேதி முதல் சிறுசேமிப்பில் முதலீடு செய்தவர்கள் எல்லோருக்குமே பெரிய அதிர்ச்சியை அளிக்கும் வகையில், வட்டிக்குறைப்பு அறிவிக்கப்பட்டது.

இனியும் சிறுசேமிப்புகளில் முதலீடு செய்ய வேண்டுமா?, போட்ட பணத்தை எல்லாம் எடுத்து மியூச்சுவல் பண்டிலோ அல்லது கூடுதலாக வருமானம் கிடைக்கும் தனியார் நிதி நிறுவனங்களிலோ போட்டுவிடலாமா? என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக போனது.

மொத்தம் 12 வகையான சிறுசேமிப்புகள் உண்டு. அதில், சேமிப்பு வைப்புத்தொகைக்கு கடந்த மார்ச் 31-ந்தேதி வரை 4 சதவீத வட்டி இருந்தது. அது ஏப்ரல் முதல் ஜூன் வரை 3.5 சதவீதமாகவும், 5 ஆண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 6.7 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாகவும், முதியோர் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 7.4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகவும், மாதாந்திர வருவாய் கணக்குக்கான வட்டி 6.6 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி 6.8 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாகவும், ‘பப்ளிக் பிராவிடண்ட் பண்டு’ என்று அழைக்கப்படும் பொதுவைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாகவும், போட்ட தொகையை இரட்டிப்பாக்கும் ‘கிசான் விகாஸ் பத்ரா’ என்ற சேமிப்புக்கு, இதுவரை வழங்கப்பட்ட 6.9 சதவீத வட்டி, இனி 6.2 சதவீதம்தான் வழங்கப்படும். அதாவது, 124 மாதங்களில் இரட்டிப்பான தொகை இனி 138 மாதங்களில்தான் இரட்டிப்பாகும். இதேபோல், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்பட்ட நிலையில், இனி 6.9 சதவீதம்தான் வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது.

இது எல்லாவற்றையும்விட அதிக பாதிப்பு, ஒரு ஆண்டு டெபாசிட்டுக்குத்தான். 5.5 சதவீத வட்டிக்கு பதிலாக இனி 4.4 சதவீதம்தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெரிய அதிர்வு அலையை இது ஏற்படுத்தியது. ஆனால், நல்ல வேளையாக 12 மணி நேரத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “இது கவனத்தை மீறி நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு. உடனடியாக 
திரும்பப்பெறப்படுகிறது. ஏற்கனவே, வழங்கப்பட்ட வட்டியே அடுத்த 3 மாதங்களுக்கும் தொடரும்” என்று அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்றே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முதலில் வெளிவந்த அறிவிப்பு பெரிய அதிர்ச்சியை அளித்தது. நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு அதற்கு நிவாரணமாக அமைந்தது. 5 மாநில சட்டசபை தேர்தலில், முதல் அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் திரும்ப பெறப்பட்டது என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் வந்தாலும், பொதுமக்களின் அதிர்ச்சியை போக்க அளிக்கப்பட்ட இந்த அறிவிப்பு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. ஆனால், இது எப்போதும் தொடரவேண்டும். பெரும்பாலான மக்கள் வேறு வருவாய் இல்லாமல், கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால், தாங்கள் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த சிறுசேமிப்புகளில் கிடைக்கும் வட்டியை வைத்தே வாழ்க்கை சக்கரத்தை ஓட்டுகிறார்கள். குறிப்பாக, முதியோர் இந்த வட்டித்தொகையை வைத்தே மாதாந்திர பட்ஜெட் போட்டு நாட்களை கழிக்கிறார்கள்.

ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, மற்றொரு பக்கம் மருத்துவ செலவு அதிகரிப்பு என்ற சூழ்நிலையில், கூடுமான வரையில் சிறுசேமிப்புக்கு வழங்கப்படும் வட்டியில் கைவைக்காமல் இருப்பது நல்லது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் வங்கி துணை கவர்னராக இருந்த சியாமளா கோபிநாத் குழு அளித்த அறிக்கையை பின்பற்றி, சிறுசேமிப்பு திட்டங்களை சீரமைக்கவேண்டும் என்ற ஒரு கோரிக்கை நிலவுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அந்த நாட்டிலுள்ள உள்நாட்டு சேமிப்புகள் முக்கியமான அம்சமாக இருக்கும். எனவே, சேமிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், அதற்கு வழங்கப்படும் வட்டித்தொகை இருக்கவேண்டுமே தவிர, “நீ எங்களுக்கு வேண்டாம், வெளியே தனியார் சேமிப்புகளுக்கு போ” என்று தள்ளிவிடும் வகையில் வட்டிக் குறைப்புகள் இருக்கக்கூடாது.

Next Story