இரவு ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்


இரவு ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
x
தினத்தந்தி 14 April 2021 10:00 PM GMT (Updated: 14 April 2021 7:30 PM GMT)

நாட்டில் கொரோனா காலெடுத்துவைத்து ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், திரும்பவும் இப்போது விஸ்வரூபம் எடுக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

 தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் நன்றாக குறைந்து கொண்டிருந்த கொரோனா, இப்போது 2-வது அலையாக மிக வேகமான பரவலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி 438 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மட்டும் 7 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டு, புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், கடந்த 8-ந்தேதி முதல் தமிழக அரசு அடுக்கடுக்காக பல கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. 9-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்த கட்டுப்பாடுகளுக்கு எல்லாம் நல்ல பலன் கிடைக்கவில்லை என்றால், இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்ற அபாய சங்கை ஊதிவிட்டது.ஏற்கனவே, பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள், வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்குகள் விதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களில் அன்றாட வாழ்க்கை பெரிதும் சீர்குலைந்துள்ளது. மாநில வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஜூலை மாதம் 27-ந்தேதி 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழ்நாட்டில் பெரும்பாலான அலுவலகங்கள் முறையாக இயங்கவில்லை. தொழிற்சாலைகளில், குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்களில் உற்பத்தி பெரும் வீழ்ச்சி அடைந்தது. கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள், வியாபாரம் இல்லாமல் படுத்துவிட்டது. பெரும்பாலான மக்கள் வேலை இழந்தனர். பல தொழிற்சாலைகள் வேறு வழியில்லாமல் ஆள் குறைப்பு, சம்பள குறைப்பு விதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன.

இந்தநிலையில், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு தமிழகத்தின் பொருளாதாரம் எழுந்துவரும் சூழ்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற அறிவிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தொழிற்சாலைகளில் இரவு நேர பணி இல்லையென்றால், உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும். பலர் வேலையிழக்க நேரிடும். தொழில் நிறுவனங்களின் வருமானம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். இதுபோல, கடைகள், ஓட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்கள் எல்லாம் இரவு நேரத்தில் மூடப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாவார்கள். ஏனெனில், பகலில் வேலைக்கு செல்லும் மக்கள் இரவில்தான் கடைகளுக்கு, ஓட்டல்களுக்கு செல்வார்கள். தொலைதூரம் சென்று பகலில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்கு தொழிலாளர்களுக்கும் போக்குவரத்து வசதி இருக்காது. பெரும்பாலான சரக்கு போக்குவரத்துகள் இரவில்தான் இருக்கும் சூழ்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், அதனால் பாதிப்பு ஏற்படும். பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும். எனவே, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு பதிலாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இன்னும் வேகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் எந்தவிதமான தயவு தாட்சண்யமும் வேண்டாம். முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது இப்போது எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அதிகமாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனைகள், தடுப்பூசி போடுவதை இன்னும் அதிகரிக்க வேண்டும். ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்த 30 பேர்களை 3 நாட்களுக்குள் தேடிக்கண்டுபிடித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். எனவே, அரசின் முயற்சிகள் எல்லாம் கொரோனா பரவலை தடுப்பதில்தான் இருக்க வேண்டுமே தவிர, இரவு நேர ஊரடங்கு என்பதை இப்போதைக்கு நினைக்க வேண்டாம் என்பதே இரவு நேர ஊரடங்கு வந்துவிடுமோ? என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் பரிதாப குரலாக இருக்கிறது.

Next Story