இது மு.க.ஸ்டாலினின் முத்தான வெற்றி!


இது மு.க.ஸ்டாலினின் முத்தான வெற்றி!
x
தினத்தந்தி 2 May 2021 10:00 PM GMT (Updated: 2 May 2021 6:17 PM GMT)

தி.மு.க. பெரும்பான்மையான வெற்றியை பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்போகிறது.

16-வது சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. தி.மு.க. பெரும்பான்மையான வெற்றியை பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்போகிறது. இந்தத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான, சரித்திரத்தில் என்றென்றும் நினைவு கூறத்தக்க தேர்தலாகும். ஏனெனில் தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் மறைந்த பிறகு, அவர்களின் தலைமையில்லாமல் போட்டியிட்ட முதல் தேர்தல்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் தலைமையேற்ற பிறகு நடந்த முதல் தேர்தல். எனவே யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்? என்று தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே உற்று நோக்கிக்கொண்டிருந்த தேர்தல்.

இந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி சாதாரணமான வெற்றி அல்ல. மகத்தான வெற்றி. 1976-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு தொடர்ந்து 3 தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து 1989-ல் நடந்த தேர்தலில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அதுபோல, இப்போது அ.தி.மு.க. 2 தேர்தல்களில் 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபிறகு நடந்த இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் வெற்றி வாகைச்சூடி சரித்திரம் படைத்துள்ளன.

இந்த வெற்றிக்கு காரணம் மு.க.ஸ்டாலின்தான், அவர் மட்டும்தான் காரணம் என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாகவே மு.க.ஸ்டாலினின் இடையறாத சுற்றுப்பயணம், மெய்வருத்தம் பாராத உழைப்பு, தளர்ச்சி இல்லாத முயற்சி, மக்களை சந்தித்த அணுகுமுறை, திட்டமிட்ட மேலாண்மை, மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கும் வாக்குறுதிகள் எல்லாம் சேர்ந்துதான் இந்த முத்திரை பதிக்கும் வெற்றியை ஈட்டித்தந்துள்ளது.

கொரோனாவின் உச்சத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் “ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் மூலம் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை தேடி உதவிகள் வழங்க செய்தார்.

“நம் துன்பத்தில் தேடி வருகிறார்களே” என்று மு.க.ஸ்டாலின் மீது மக்களுக்கு இந்த உதவிகள் முழு நம்பிக்கையை கொடுத்தன. தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் “எல்லோரும் நம்முடன்”, நவம்பர் மாதத்தில் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்”, டிசம்பர் மாதத்தில் “ஏன் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்”, இந்த ஆண்டு ஜனவரியில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” ஆகிய பெயர்களில் மு.க.ஸ்டாலின் நடத்திய பிரசாரங்கள் மக்கள் மனதில் ஆதரவை விதைத்தன.

ஆனால் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடனேயே அவருக்கு பெரும் பொறுப்பு காத்து நிற்கிறது. கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அவருக்கு இதுதான் பெரிய சவாலாக இருக்கும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் மிகப்பெரிய பணிகள் அவருக்காக காத்திருக்கிறது. தமிழக அரசின் நிதி நிலையும் அடுத்த பெரும் சவாலாக இருக்கும்.

அவர், கடந்த ஏப்ரல் 3-ந்தேதி “தினத்தந்தி”க்கு அளித்த சிறப்பு பேட்டியில், “நீங்கள் முதல்-அமைச்சரானால் கையெழுத்திடப்போகும் முதல் ஆணை எதுவாக இருக்கும்” என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின்போது நான் வாங்கியுள்ள மனுக்களுக்கு முதல் 100 நாட்களில் தீர்வு காண்பதற்கான ஒரு செயலாக்கத்துறையை அமைப்பது முதல் கையெழுத்தாகவும், முதல் அரசாணையாகவும் இருக்கும். தேர்தல் அறிக்கையில் உள்ள சில முத்தான திட்டங்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி, கொரோனா கால நிதி உதவியாக ரூ.4 ஆயிரம் வழங்குவது போன்றவையாகவும் இருக்கும்” என்று கூறியதெல்லாம் அவர் பதவி ஏற்ற அடுத்த சில நிமிடங்களில் நிறைவேறி மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.

மொத்தத்தில் தி.மு.க. பெற்ற வெற்றி என்பது, “ஸ்டாலின்தான் வராரு! விடியல் தரப்போறாரு! அதுதான்.., அதுதான்... மக்களோட முடிவு” என்பதுதான்.

Next Story