மோடியும் கொடுக்கிறார்; மு.க.ஸ்டாலினும் கொடுக்கிறார்; ஒருங்கிணைக்கலாமே!


மோடியும் கொடுக்கிறார்; மு.க.ஸ்டாலினும் கொடுக்கிறார்; ஒருங்கிணைக்கலாமே!
x
தினத்தந்தி 31 May 2021 7:53 PM GMT (Updated: 31 May 2021 7:53 PM GMT)

‘கிரேட் மென் திங்க் அலைக்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “மாமனிதர்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கிறார்கள்” என்பதுதான் அதன் பொருள்.

அதைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே மாதிரியான உதவியை, ஒரே நாளில் அறிவித்து, நிரூபித்திருக்கிறார்கள். கொரோனாவால் சில நேரங்களில் ஒரே குடும்பத்தில் தாய்-தகப்பன் இருவரும் உயிரிழக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் நிர்கதியாக நிற்கிறார்கள். இப்படி ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு கருணை கரம் நீட்டுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு சார்பில் அவர்கள் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும்போது அந்த தொகையை வட்டியோடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர அந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரையில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும், குழந்தைகளை வளர்க்கும் உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என பல உதவிகளை அறிவித்தார். இது எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

அதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி இதுபோல பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு பிரதமர் நலநிதியிலிருந்து 18 வயதில் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்தார். 18 வயது ஆன உடன் அந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் தொகுப்பு நிதியில் இருந்து 23 வயது வரை, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். 23 வயதில் ரூ.10 லட்சம் மொத்தமாக வழங்கப்படும். இந்த குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு இடம், தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தால் அதற்கான செலவு, மருத்துவ காப்பீடு என்பது போன்ற பல உதவிகளை அறிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா நோயால் இதுவரை 577 குழந்தைகள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் இதுபோல பெற்றோரை இழந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருவர் அறிவித்த திட்டங்களுமே பொதுமக்களால் போற்றப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் பிரதமர் அறிவித்த உதவியை வழங்குவதில் எந்தவித சிக்கலும் இருக்காது. ஆனால் தமிழகத்தை பொறுத்தமட்டில், முதல்-அமைச்சர் அறிவிப்புகள் வெளியிட்டபோதே மத்திய அரசாங்கமும், இதேபோல ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. இரு திட்டங்களின் பலனையுமே, ஒரு குழந்தை அடையலாம் என்றால் ரொம்ப நல்லது. ஆனால் பொதுவாக ஒரு திட்டத்தின் பலனைத் தான் ஒரு பயனாளி அடையமுடியும். எனவே மாநில அரசு இந்த திட்டத்தை தனது துறைகளின் மூலம் நிறைவேற்றும்போது, நிச்சயமாக சிறப்பாக செயல்படமுடியும். மத்திய அரசும், ஒரு குழந்தைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறதோ, அதை தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டால் தமிழக அரசு மத்திய அரசின் பங்கையும் வாங்கிக்கொண்டு, தனது பங்காக மேலும் கூடுதலான உதவிகளை இத்தகைய குழந்தைகளுக்கு வழங்கமுடியும். எனவே ஆதரவற்ற குழந்தைகளுக்கு மோடி அறிவித்ததையும், மு.க.ஸ்டாலின் அறிவித்ததையும் ஒருங்கிணைக்கலாம். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு செய்யும் உதவிகள் நிச்சயமாக மேன்மையானது. ஆனால் கொரோனா இல்லாமல் விபத்துகளாலோ, மற்ற வகையிலோ தாய்-தகப்பனை இழந்து, மிகுந்த இன்னலுக்கு உள்ளாகும் மற்ற குழந்தைகளுக்கும், தொட்டில் குழந்தைகள் திட்ட குழந்தைகளுக்கும் இதுபோன்ற உதவிகளை மத்திய-மாநில அரசுகள் வழங்கவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இதை அரசுகளின் கவனத்துக்கு கொண்டு வந்து, அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இதுபோன்ற உதவிகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.

Next Story