தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் 11 விளையாட்டு வீரர்கள்


தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் 11 விளையாட்டு வீரர்கள்
x
தினத்தந்தி 9 July 2021 7:23 PM GMT (Updated: 9 July 2021 7:23 PM GMT)

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி, உலகில் ஏதாவது ஒரு நாட்டில் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடக்கிறதோ?, அது அந்த நாட்டுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும்.

1896-ம் ஆண்டு கிரீஸ் தலைநகர் ஏதென்சில் முதல்முறையாக நவீன ஒலிம்பிக் போட்டி ஏப்ரல் 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடந்தது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி, உலகில் ஏதாவது ஒரு நாட்டில் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடக்கிறதோ?, அது அந்த நாட்டுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும். அந்தவகையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் கடந்தாண்டு நடைபெற்று இருக்கவேண்டும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரையில் இல்லாத அளவு ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டு, வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்கின்றன. இந்தியா சார்பில் இந்த போட்டியில் கலந்துகொள்ள 120 பேர் இதுவரை தகுதி பெற்றிருக்கின்றனர். இதில் 11 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதில் ஒவ்வொரு தமிழரும் நெஞ்சைநிமிர்த்தி பெருமை கொள்ளலாம். இதுவரையில் தமிழ்நாட்டில் இருந்து இவ்வளவு வீரர்கள் ஒரேநேரத்தில் கலந்துகொண்டதில்லை. அதிலும் குறிப்பாக தடகளப்போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்துகொள்கிறது. அதில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். வறுமையும், ஏழ்மையும் சாதனைக்கு தடையில்லை. திறமையிருந்தால், ஊக்கமிருந்தால், பயிற்சியிருந்தால் எதையும் செய்துவிடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த 5 வீரர்கள், ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

திருச்சியை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ், தனலட்சுமி, சுபா வெங்கடேசன், மதுரையை சேர்ந்த ரேவதி வீரமணி, நாகநாதன் பாண்டி ஆகியோரும் தான் இந்த ஐவர் அணி. இவர்கள் எல்லோருடைய பின்புலத்தையும் பார்த்தால், எவ்வளவு முயற்சியிருந்தால், இந்த அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதிலும் குறிப்பாக ரேவதி, ‘ஷூ’ அணியாமல் வெறும் காலுடன் ஓடித்தான் தன் ஓட்டப்பந்தயத்தை தொடங்கியிருக்கிறார். தகுதித்தேர்வு போட்டியில் ரேவதி முதலாவதாகவும், சுபா இரண்டாவதாகவும், தனலட்சுமி மூன்றாவதாகவும் வந்திருக்கிறார்கள். ஆரோக்ய ராஜீவ் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனுபவத்தை பெற்றவர். அடுத்தவீரரான நாகநாதன், தமிழ்நாடு காவல்துறையில் ஆயுதப்படைப்பிரிவில் போலீஸ்காரராக இருக்கிறார். இவர்கள்தவிர, பாய்மர படகுப்போட்டியில் நேத்ரா குமணன், வருண் தக்கர், கே.சி.கணபதி ஆகியோரும், டேபிள் டென்னிஸ் போட்டியில் சத்யன், சரத்கமல் ஆகியோரும், வாள்சண்டை போட்டியில் பவானிதேவியும் இந்த போட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் வாள்சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் தமிழ்நாட்டை சேர்ந்த பவானிதேவி தான் என்பது கூடுதல் பெருமை.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள் ஒவ்வொருவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 6 பேர் மட்டுமே ஹாக்கி அணியில் விளையாடி ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றிருக்கிறார்கள். கடைசியாக 1980-ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் பெற்ற நேரத்தில் அந்த அணியின் கேப்டனாக தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கரன் இருந்தார். அதில் இருந்து இதுவரை தமிழ்நாட்டில் இருந்து யாரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதில்லை. இப்போது ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்த11 வீரர்களும் தங்கள் முழு திறமையையும் காட்டி, 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கங்களை பெற்று, தமிழ்நாட்டுக்கு புகழ் சேர்க்கவேண்டும் என்று தமிழக மக்கள் வாழ்த்துகிறார்கள். இப்போது ஒன்றுமட்டும் நன்றாக தெரிகிறது. தமிழ்நாட்டில் திறமைக்கு பஞ்சமில்லை. சின்ன கிராமங்களில்கூட திறமையானவர்கள் இருக்கிறார்கள். இளம்வயதிலேயே அவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து, ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய அணியா?, அதில் தமிழக வீரர்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள்; தமிழக வீரர்கள்தான் பதக்கங்களை கொண்டுவந்து நாட்டுக்கு பெருமை சேர்க்கிறார்கள் என்ற சிறப்பை பெறும் வகையில் தமிழகஅரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முழுமுயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.


Next Story