3-வது அலையை தடுக்கும் கேடயம் முக கவசம்தான்!


3-வது அலையை தடுக்கும் கேடயம் முக கவசம்தான்!
x
தினத்தந்தி 2 Aug 2021 8:10 PM GMT (Updated: 2 Aug 2021 8:10 PM GMT)

கொரோனா நம்மைவிட்டு ஓடும், இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இப்போது 3-வது அலை வந்துவிடுமோ?

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடங்கி 16 மாதங்கள் ஆகின்றன. எப்போது கொரோனா நம்மைவிட்டு ஓடும், இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இப்போது 3-வது அலை வந்துவிடுமோ? என்ற அச்சம் அரசுக்கும், மக்களுக்கும் வந்துவிட்டது.

முதல் கட்ட ஊரடங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, நன்றாக பரவல் குறைந்த நேரத்தில், இந்த ஆண்டு டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா 2-வது அலையாக உருவெடுத்து பரவிவருகிறது. இதைப்பற்றி ஆய்வு செய்த அமெரிக்க நாட்டிலுள்ள நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், இந்த உருமாறிய கொரோனா அம்மை நோயைவிட வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது என்று கண்டறிந்துள்ளது. மற்றொரு அதிர்ச்சியான தகவல், தடுப்பூசி போட்டவர்களையும் இது பாதிக்கும் என்பது, டெல்லியிலுள்ள ஒரு பெண் டாக்டருக்கு 3 முறை கொரோனா வந்ததன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் அவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தடுப்பூசி போடாத நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், முதல் தடுப்பூசியை இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதியும், 2-வது தடுப்பூசியை மார்ச் 15-ந்தேதியும் போட்டிருக்கிறார். ஆனால், ஏப்ரல் 10-ந்தேதி 2-வது முறையும், அதேமாதம் 25-ந்தேதி 3-வது முறையும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தால் உயிரிழப்பு ஏற்படாது, வந்த சுவடும் தெரியாமல் போய்விடும்.

தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால்தான் இதுவரையில் ஊரடங்கை நீட்டிக்கும் போதெல்லாம் தளர்வுகளை அறிவித்துக்கொண்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் 31-ந்தேதி முதல், வருகிற 9-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் எந்த தளர்வுகளையும் அறிவிக்கவில்லை. “ஊரடங்கை ஓரளவு தளர்த்தினால் உடனடியாக அனைவரும் கூட்டமாக சேர்ந்துவிடுகிறோம்” என்று டாக்டர் ரேலா மருத்துவமனை விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பிலும் அதையே குறிப்பிட்டுள்ளார். “ஏதாவது குறிப்பிட்ட பகுதிகளில், அதிக அளவில் கூட்டம் சேர்வது தொடர்ந்து காணப்பட்டால், அந்தப்பகுதி மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர், அந்த பகுதிகளை மூடும் நடவடிக்கைகளை பொதுநலன் கருதி முடிவு செய்யலாம்” என்று கூறியுள்ளார்.

முதல்-அமைச்சரின் அறிவிப்பு வெளிவந்த ஒருசில மணி நேரங்களில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தியாகராயநகர் ரெங்கநாதன் தெரு, புரசைவாக்கம் டவுட்டன் பகுதி உள்பட 9 பகுதிகளை வருகிற 9-ந்தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நேற்று ஆடி கிருத்திகை, இன்று ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. “3-வது அலை என்று தமிழ்நாட்டில் ஒன்று ஏற்படவே முடியாதபடி தமிழக மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும். வருமுன் காத்தலே விவேகம். இதில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்” என்று கூறிய முதல்-அமைச்சர், மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்வது ஆகியவற்றை வலியுறுத்தி கூறியிருக்கிறார். இதை எந்த விழாவில், எந்தக் கூட்டத்தில் பேசும்போதும் வலியுறுத்தி வருகிறார். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஒருவார கால தொடர் பிரசாரத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார்.

ஆக, இப்போது 3-வது அலை வராமல் தடுப்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. கொரோனா போரை வெல்லும் வீரர்கள் மக்கள்தான். அவர்கள் கையில் உள்ள ஆயுதங்கள் தடுப்பூசி, முக கவசம், சமூக இடைவெளிதான். இந்தப் போரில் எல்லோருமே தங்களை தற்காத்துக்கொள்ளும் முதல் ஆயுதம் முக கவசம்தான். இந்த நடைமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மீது அதிகாரிகளும் இனி, கரும்புக்கரம் கொண்டல்ல, சற்று இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story