மழைக்காலத்தில் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்


மழைக்காலத்தில்  செய்ய  வேண்டிய  தடுப்பு  நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 30 Jun 2017 9:15 PM GMT (Updated: 30 Jun 2017 11:24 AM GMT)

மழைக்காலம் தொடங்கி இருக்கும் சூழலில், வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.

ழைக்காலம் தொடங்கி இருக்கும் சூழலில், வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. குறிப்பாக, வீடுகளில் தகுந்த பராமரிப்புகள் செய்யப்படாவிட்டால், மரப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றிலும் பூஞ்சை காளான்கள் படர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

‘பிளாஸ்டிக் ஷீட்’

வீட்டின் மேற்கூரை ஓடுகளால் அமைக்கப்பட்டிருந்தால், மழைக்காலத்தில் கூரையின் மேற்புறத்தில், தேவைக்கேற்ப பெரிய சைஸ் ‘பிளாஸ்டிக் ஷீட்’ விரித்து பாதுகாக்கலாம். மேற்கூரை கான்கிரீட் தளமாக இருக்கும் பட்சத்தில் ‘வெதரிங் கோர்ஸ்’ நிலை பற்றி கவனித்து, தண்ணீர் கசிவுகளை தடுக்க வேண்டும். அதன் மூலம் சுவர்களில் ஏற்படும் ஓதங்கள் தவிர்க்கப்படும்.

மரப்பொருட்கள் பராமரிப்பு

கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மரத்தால் செய்யப்பட்டவையாக இருந்தால் அதன் பராமரிப்புகளை சரியாக செய்யவேண்டும். மழைக்காலங்களில் அவற்றை உலர்ந்த துணி கொண்டு அவ்வப்போது துடைக்கலாம். நாற்காலிகள், டிவி போன்ற பொருட்களை அடிக்கடி துடைப்பதோடு, கார்பெட்டுகளை மழைக்காலத்தில் பயன்படுத்தாமல் சுருட்டி வைப்பதும் சரியான முடிவாக இருக்கும். ‘போம்’ வகை சோபாக்களை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி வைப்பதோடு, சோபாக்கள் மற்றும் கட்டில் கால்களுக்கு சரியான ‘புஷ்கள்’ பொருத்தி தண்ணீர் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

 எண்ணெய் விடலாம்

மழைக்காலங்களில் மரக்கதவுகள் இறுக்கமாக மாறி எளிதாக திறப்பது அல்லது மூடுவது ஆகியவை சிரமமாக இருக்கும். அதற்கு தகுந்த எண்ணெய் விட்டால் இறுக்கம் தளர்ந்து தாமாக சரியாகிவிடும். அலமாரிகளை ஈரப்பதம் இல்லாமல் துடைத்து, நன்கு உலர்ந்த பிறகு பொருட்களை அதில் அடுக்கலாம். மழை பெய்யும் சமயத்தில் பால்கனி வழியாக வீட்டுக்குள் சாரல் வராமல் இருக்க கெட்டியான ‘பிளாஸ்டிக் ஷீட்’ ஒன்றை திரைபோல அமைத்துக்கொள்ளலாம்.

ஈரப்பதத்தை தடுக்கலாம்

பாத்ரூம் கதவுகள் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தால், தண்ணீர் பட்டு அரித்துவிடுவது வழக்கம். கதவின் கீழ்ப்புறத்தில் அலுமினிய தகடு பொருத்திவிட்டால் ஈரப்பதம் அவற்றை பாதிக்காது. மேலும், குளியலறையின் வாசற்படி உயரம் குறைவாக இருந்து, வீட்டின் தரை உயரமாக இருந்தால் தண்ணீர் வெளியே வரக்கூடும். அதை தடுக்க சிறிய அளவில் கிரானைட் அல்லது டைல்ஸ் வகையை ஒட்ட வைத்து, வாசற்படியை உயரமாக்கினால் ஈரம் வெளியே பரவாது.

‘வாட்டர் சம்ப்’

தரையடி தண்ணீர் தொட்டிகள் இருக்கும் வீடுகளில் அவற்றின் சுவர்களை உயரப்படுத்த வேண்டும். அதன் மூலம் கழிவு நீர் கலக்காமல் தடுக்க இயலும். கசிவுகள் இருப்பது அறியப்படும்போது, ‘லீக்கேஜ் புரூப்’ கலந்த ஒயிட் சிமெண்டு மூலம் அந்த இடத்தை அடைத்துவிட வேண்டும். பொதுவாக, மழைக்காலங்களில் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு தொடராமல் நிறுத்தி விடுவது வழக்கம். காரணம் மணல், செங்கல் போன்ற கட்டுமான மூலப்பொருட்களை பாதுகாப்பது சிரமம். அவ்வாறு மழைக்காலத்தில் பணிகளை தொடர வேண்டிய அவசியம் இருப்பினும், கான்கிரீட் தளம் போடும் வேலையை தவிர்ப்பது அவசியம். அதன் மூலம் பலவிதமான பொருள் விரயங்கள் தவிர்க்கப்படும்.

கட்டுமான பணிகள்

கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள் தக்க எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். தக்க மழை கோட்டுகள் அணிந்து பணிகளில் ஈடுபடுவதுதான் பாதுகாப்பானது. முக்கியமாக காலுக்கு ரப்பர் ஷூ வகைகளை அணிவதன் மூலம் ஈரம் அல்லது இதர பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். கட்டுமான பணி நடக்கும் இடங்களில் மழைக்காலங்களில் தரைப்பரப்புகள் வழுக்கக்கூடிய தன்மை கொண்டவையாக இருப்பதால் தகுந்த காலணிகளை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக உயரமான தளங்களில் பணி புரிபவர்கள் அனைத்து வி‌ஷயங்களிலும் கவனமாக செயல்பட வேண்டியது முக்கியம். ஈரப்பதம் காரணமாக மின்சார பாதிப்புகள் எளிதாக ஏற்படும் சூழல் இருப்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

மின்னல் கவனம்

முக்கியமாக உயரமான கட்டிடங்களில் பணி புரிபவர்கள் இடியும், மின்னலும் ஏற்படும் சமயங்களில் உலோக பொருட்களை கைகளில் வைத்திருப்பது அல்லது உலோக பொருட்கள் மீது நிற்பது ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம். குறிப்பாக, டவர் கிரேன்களை இயக்குபவர்கள் மழை நின்ற பிறகு பணிகளை தொடர்வதுதான் பாதுகாப்பானது. காரணம், உயரமான இரும்பு கம்பம் போல நிற்கும் கிரேன் மின்னலால் எளிதில் தாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

Next Story