கிரிக்கெட் போட்டியின் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்


கிரிக்கெட் போட்டியின் போது சுருண்டு விழுந்து  உயிரிழந்த வீரர்
x
தினத்தந்தி 18 Dec 2017 7:20 AM GMT (Updated: 18 Dec 2017 7:19 AM GMT)

கேரளாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர், மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கொச்சி

கேரள மாநிலத்தில், உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கிரிக்கெட் அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடினர். இதில் காசர்கோடு மாவட்டம் உப்பாலாவில்  இருந்து வந்திருந்த பத்மநாப்  ஜோடுகல்லு என்ற இளம்வீரர், பந்து வீச்சில் ஈடுபட்ட போது மாரடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். பத்மநாப் மயங்கி விழுந்ததைக் கண்ட மற்ற வீரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிகப்படியான வெயிலின் காரணமாக பத்மநாப் மயங்கி விழுந்திருக்கலாம் என்று அங்கிருந்த பயிற்சியாளர்கள் மற்றும் போட்டியின் நடுவர்கள் கருதினர். ஆனால், மருத்துவர்கள் பத்மநாப்பை சோதித்து பார்த்த பின்னர், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இந்த செய்தியைக் கேட்ட சகவீரர்கள் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், கிரிக்கெட் போட்டியை வீடியோ எடுக்கும் போது அதில் பத்மநாப் மைதானத்தில் மயங்கி விழும் காட்சிகள் பதிவாகி உள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்ட பத்மநாப், கிரிக்கெட் விளையாடும் போதே உயிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கடந்த 2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் பெங்காலி வீரர் ஒருவர், சக வீரர் ஒருவருடன் மைதானத்தில் மோதிக் கொண்டதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story