20 ஓவர் கிரிக்கெட்: 35 பந்தில் சதம் விளாசி உலக சாதனையை சமன் செய்தார், ரோகித் சர்மா
பலவீனமான இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய பேட்ஸ்மேன்களிடமும், பந்து வீச்சாளர்களிடமும் சிக்கி சின்னாபின்னாமாகி விட்டது.
இந்தூர்,
பலவீனமான இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய பேட்ஸ்மேன்களிடமும், பந்து வீச்சாளர்களிடமும் சிக்கி சின்னாபின்னாமாகி விட்டது. ஏண்டா... இந்தியாவுக்கு சென்றோம் என்று நினைக்கும் அளவுக்கு இலங்கையை நமது வீரர்கள் நையபுடைத்து வருகிறார்கள்.
இந்தூரில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2–வது 20 ஓவர் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதத்தை எட்டினார். சர்வதேச 20 ஓவர் போட்டி வரலாற்றில் தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் இரு மாதங்களுக்கு முன்பு 35 பந்தில் (வங்காளதேசத்துக்கு எதிராக) சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது. அந்த உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார். ரோகித் சர்மா 43 பந்துகளில் 118 ரன்கள் (12 பவுண்டரி, 10 சிக்சர்) திரட்டிய நிலையில் கேட்ச் ஆனார். ரோகித் சர்மா இதே தொடரில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் நொறுக்கியது நினைவு கூரத்தக்கது.
20 ஓவர் போட்டியில் டாப்–5 அதிவேக சதங்கள் வருமாறு:–
வீரர் நாடு சதத்திற்குரிய பந்து எதிரணி ஆண்டு
டேவிட் மில்லர் தென்ஆப்பிரிக்கா 35 வங்காளதேசம் 2017
ரோகித் சர்மா இந்தியா 35 இலங்கை 2017
ரிச்சர்ட் லெவி தென்ஆப்பிரிக்கா 45 நியூசிலாந்து 2012
பாப் டு பிளிஸ்சிஸ் தென்ஆப்பிரிக்கா 46 வெஸ்ட் இண்டீஸ் 2015
லோகேஷ் ராகுல் இந்தியா 46 வெஸ்ட் இண்டீஸ் 2016