இந்தியா–தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட்: 3–வது நாள் ஆட்டம் மழையால் ரத்து


இந்தியா–தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட்: 3–வது நாள் ஆட்டம் மழையால் ரத்து
x
தினத்தந்தி 7 Jan 2018 9:30 PM GMT (Updated: 7 Jan 2018 8:25 PM GMT)

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்டில் 3–வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

கேப்டவுன்,

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்டில் 3–வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

கேப்டவுன் டெஸ்ட்

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள கேப்டவுன் மைதானத்தில் கடந்த 5–ந்தேதி தொடங்கியது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து சரமாரியான பவுன்சுடன், ஸ்விங்கும் ஆனது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்தன. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 93 ரன்கள் விளாசினார்.

இந்த ஆடுகளத்தில் பந்தின் நகரும் தன்மைக்கு ஏற்ப கணித்து செயல்படாவிட்டால் சிக்கல் தான். பந்து பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் மற்றும் ஸ்லிப் பகுதியில் நிற்கும் பீல்டர்களின் கைக்கு சென்று விடும். இந்த வகையில் தான் பெரும்பாலான வீரர்கள் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள்.

77 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2–வது நாள் முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட காஜிசோ ரபடா 2 ரன்னுடனும், ஹசிம் அம்லா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழையால் ரத்து

இந்த நிலையில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட 3–வது நாளான நேற்று மழை புகுந்து விளையாடியது. முந்தைய இரவில் லேசாக பெய்த மழை, நேற்று காலையிலும் தொடர்ந்தது. காற்றுடன் மழை நீடித்ததால் வேறுவழியின்றி 3–வது நாள் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

மழையால் நேற்றைய ஆட்டம் முழுமையாக ரத்தானதால் வீரர்கள் வேண்டுமென்றால் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டவுன் பகுதி மக்கள் நிச்சயம் பூரிப்படைந்திருப்பார்கள்.

4–வது நாளான இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். மழையின் இழப்பீட்டை கருத்தில் கொண்டு ஆட்ட நேரம் மாலையில் 30 நிமிடங்கள் கூடுதலாக நீட்டிக்கப்படும். அதாவது இன்றைய நாளில் மொத்தம் 98 ஓவர்கள் வீசப்பட வேண்டும். இன்றைய தினம், மழை ஆபத்து பெரிய அளவில் இல்லை என்று அங்குள்ள வானிலை மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஜாரா பேட்டி

முன்னதாக இந்திய வீரர் புஜாரா அளித்த ஒரு பேட்டியில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அதிகமான ரன்களை ‘சேசிங்’ செய்ய விரும்பவில்லை. இந்த ஆடுகளத்தன்மையை பார்க்கும் போது 350 ரன்கள் வரை விரட்டிப்பிடிக்க இலக்காக இருக்கும் என்று கருதுகிறேன். முதல் இன்னிங்சில் எங்களது டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. ஆனால் 2–வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.

கைவசம் 8 விக்கெட்டுகள் வைத்துள்ள தென்ஆப்பிரிக்க அணி இதுவரை 142 ரன்கள் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story