பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 9 Jan 2018 11:15 PM GMT (Updated: 9 Jan 2018 7:04 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நெல்சன்,

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல்-ஹக் 2 ரன்னிலும், அசார் அலி 6 ரன்னிலும், பாபர் அசாம் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்து தடுமாறியது.

பின்னர் வந்த முகமது ஹபீஸ் (60 ரன்), ஷதாப்கான் (52 ரன்), ஹசன் அலி (51 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோரின் அரைசதத்தால் பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து மீண்டது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ ரன் எதுவும் எடுக்காமலும், அடுத்து வந்த கேப்டன் கனே வில்லியம்சன் 19 ரன்னிலும் வெளியேறினர். அந்த அணி 14 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 25 ஓவர்களில் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நியூசிலாந்து அணிக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதை நோக்கி ஆடிய அதிரடி ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்திலும், ராஸ் டெய்லரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

நியூசிலாந்து அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 151 ரன்கள் திரட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கப்தில் 86 ரன்னுடனும் (71 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), ராஸ் டெய்லர் 45 ரன்னுடனும் (43 பந்து, 4 பவுண்டரி) களத்தில் நின்றனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒருநாள் போட்டி டுனெடினில் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.

Next Story