தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மா, தவானை சேர்த்தது சரியான முடிவா?


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மா, தவானை சேர்த்தது சரியான முடிவா?
x
தினத்தந்தி 10 Jan 2018 11:16 PM GMT (Updated: 10 Jan 2018 11:16 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டுக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, தவானை சேர்த்தது சரியான முடிவா? என்று இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 208 ரன்கள் இலக்கை கூட தொட முடியாமல் இந்திய அணி 135 ரன்களில் சுருண்டு, 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

கேப்டவுன் டெஸ்டில் இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:–

இந்திய வீரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் வெளிநாட்டு மண்ணில் நன்றாக விளையாடியதில்லை. அவர்களது சாதனை விவரங்களை எடுத்து பார்த்தாலே அது புரியும். உள்நாட்டில் வியப்புக்குரிய வகையில் விளையாடி இருக்கிறார்கள். வெளிநாட்டில் அவர்களது செயல்பாடு அதற்கு நேர்மாறாக உள்ளது. எனவே வெளிநாட்டு சீதோஷ்ண நிலையில் சிறப்பாக விளையாடக்கூடிய விராட் கோலி, முரளிவிஜய் ஆகியோரையே நாம் அதிகமாக நம்பி இருக்கிறோம்.

புஜாராவை எடுத்துக் கொண்டால் அவரது 14 சதங்களில் 13 சதங்கள் இந்திய துணை கண்டத்தில் அடிக்கப்பட்டவை ஆகும். அதே நேரத்தில் லோகேஷ் ராகுல் பற்றி ஏன் அடிக்கடி குறிப்பிடுகிறேன் என்றால், அவர் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இலங்கையிலும் அசத்தி இருக்கிறார். ஒரு வீரர் எந்த அளவுக்கு பார்மில் இருக்கிறார் என்று மட்டும் பார்க்கக்கூடாது, அவர் எந்த நாட்டில் ரன்கள் குவிக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

முதலாவது டெஸ்டில் கிடைத்த முடிவு எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இதற்காக நாம் பதற்றம் அடைய வேண்டியது இல்லை. விராட் கோலி மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அடுத்த போட்டியில் மேம்பட்ட ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவதை நாம் பார்ப்போம்.

கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு அணியில் அதிரடியான மாற்றங்கள் செய்வார்கள் என்று நினைக்கவில்லை. ரஹானே அல்லது லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவர் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படலாம். ரோகித் சர்மா இடத்தில் ரஹானேவை களம் இறக்கலாம். லோகேஷ் ராகுலை தொடக்க வரிசைக்கு கொண்டு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

நான் பரிந்துரை செய்வது என்றால் 2–வது டெஸ்ட் போட்டிக்கு 5 பவுலர்களுடன் களம் இறங்குவேன். தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுலை சேர்ப்பேன். ரோகித் சர்மாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குவேன்.

தொடக்க டெஸ்டில் எந்த பேட்ஸ்மேன்களும் சரியாக ஆடவில்லை. குறிப்பாக டாப் வரிசையில் ஒரு அரைசதம் கூட அடிக்கப்படவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு அடுத்த போட்டியில் வலுவான அணியாக மீண்டு வர வேண்டும். தோல்வி குறித்து பெரிய அளவில் விமர்சனங்கள் வரவில்லை. எனவே 2–வது டெஸ்டில் இந்திய அணி இதை விட கடுமையாக போராட வேண்டும்.

செஞ்சூரியன் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே இருக்கும். கேப்டவுனை விட இங்கு பந்து அதிகமாக எகிறும். அதே சமயம் கேப்டவுனில் இருந்த அளவுக்கு ‘ஸ்விங்’ ஆகாது என்று கருதுகிறேன். இருப்பினும் ஆடுகளத்தில் வேகம் இருக்கும்.

இவ்வாறு கங்குலி கூறினார்.


Next Story