‘தென்ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை சேர்த்தது சரி தான்’ பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து


‘தென்ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை சேர்த்தது சரி தான்’ பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து
x
தினத்தந்தி 22 Jan 2018 10:30 PM GMT (Updated: 22 Jan 2018 7:36 PM GMT)

வீரர்கள் ரன்-அவுட் ஆன விதம் வேதனை அளித்தது என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார். #RaviShastri #cricket

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டி தொடரில் ஆடும் லெவன் அணியில் ரோகித் சர்மாவை சேர்த்தது சரியான முடிவு தான். வீரர்கள் ரன்-அவுட் ஆன விதம் வேதனை அளித்தது என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. கேப்டவுன் மற்றும் செஞ்சூரியனில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டு 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உள்ளூரை பொறுத்தமட்டில் நமக்கு சூழ்நிலை நன்கு தெரியும். இதனால் நாம் அதிகம் கஷ்டப்பட வேண்டிய தேவையில்லை. இங்குள்ள சூழ்நிலை நமக்கு முழுமையாக தெரியாது. மேலும் 10 நாட்களுக்கு முன்பு இங்கு வந்து பயிற்சி எடுத்து இருந்தால் போட்டியின் முடிவு வேறுமாதிரி இருந்து இருக்கலாம். அதனை தோல்விக்கான காரணமாக சொல்ல முடியாது. ஏனெனில் ஒரே மாதிரியான பிட்ச்சில் தான் இரு அணிகளும் விளையாடுகிறது. 2 டெஸ்டிலும் நாம் 20 விக்கெட்டுகளையும் (இரு இன்னிங்சிலும் சேர்த்து) கைப்பற்றினோம். அதனால் 2 டெஸ்டிலும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கடைசி டெஸ்ட் சிறப்பான போட்டியாக அமையும். கடைசி டெஸ்டில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அடுத்து வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பயணத்தின் போது டெஸ்ட் வீரர்களை முன்கூட்டியே அனுப்பி பயிற்சி எடுப்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படும். நமது பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் சாய்ப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு எல்லா விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இது நல்ல அறிகுறியாகும். நாம் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நமது அணியின் செயல்பாடு நம்பர் ஒன் அணியை போல் தான் இருந்தது. நமது நாட்டுக்கு வரும் போது வெளிநாட்டு அணிகள் இதில் பாதி அளவு கூட சிறப்பாக செயல்படுவதில்லை.

2-வது டெஸ்ட் போட்டியில் நமது வீரர்கள் சிலர் ‘ரன்-அவுட்’ ஆன விதம் பள்ளி சிறுவர்கள் ஆடுகையில் செய்யும் தவறு போல் இருந்தது. அந்த ரன்-அவுட் வேதனை அளித்தது. இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். ரோகித் சர்மாவின் பார்மை கருத்தில் கொண்டு தான் முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு அளித்தது. அந்த முடிவு சரியானது தான். இதேபோல் ரஹானேவை சேர்த்து அவர் சரியாக ஆடாவிட்டால், ரோகித் சர்மாவை சேர்க்காதது ஏன்? என்று கேட்பார்கள்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

Next Story