முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: ‘திரில்’ வெற்றியுடன் வெளியேறியது இங்கிலாந்து நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: ‘திரில்’ வெற்றியுடன் வெளியேறியது இங்கிலாந்து நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 18 Feb 2018 10:00 PM GMT (Updated: 18 Feb 2018 7:18 PM GMT)

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்ற போதிலும், இங்கிலாந்து அணியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

ஹாமில்டன்,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்ற போதிலும், இங்கிலாந்து அணியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

20 ஓவர் கிரிக்கெட்


ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஹாமில்டனில் நேற்று அரங்கேறிய 6-வது மற்றும் கடைசி லீக்கில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.

பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கேப்டன் இயான் மோர்கன் (80 ரன், 46 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), டேவிட் மலான் (53 ரன், 36 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) அரைசதம் விளாசினர்.

முன்ரோ அதிரடி

பின்னர் இலக்கு 195 ரன்கள் என்ற போதிலும் 175 ரன்கள் எடுத்தாலே ‘ரன்-ரேட்’ அடிப்படையில் இறுதிசுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலையுடன் நியூசிலாந்தின் இன்னிங்சை மார்ட்டின் கப்திலும், காலின் முன்ரோவும் தொடங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சை வெளுத்து வாங்கிய முன்ரோ 18 பந்துகளில் அரைசதத்தை எட்டி அசத்தினார். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் (6.3 ஓவர்) சேர்த்த நிலையில் பிரிந்தனர். காலின் முன்ரோ 57 ரன்களுடனும் (21 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), கப்தில் 62 ரன்களுடனும் (47 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினர்.

மிடில் ஓவர்களில் கேப்டன் வில்லியம்சன் (8 ரன்), ராஸ் டெய்லர் (7 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்து ரன்வேகத்தை இங்கிலாந்து பவுலர்கள் ஓரளவு கட்டுப்படுத்திய போதிலும் நியூசிலாந்தை 175 ரன்களுக்குள் முடக்க முடியவில்லை.

இங்கிலாந்து வெற்றி

கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வீசிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரன் முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி பந்தில் பவுண்டரி தேவையாக இருந்த போது, அதை எதிர்கொண்ட கிரான்ட்ஹோம் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. கிரான்ட்ஹோம் 7 ரன்னுடனும், மார்க் சாப்மன் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

லீக்சுற்று முடிவில் எந்த தோல்வியையும் சந்திக்காத ஆஸ்திரேலியா (4 வெற்றியுடன் 8 புள்ளி) ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றி, 3 தோல்வி என்று 2 புள்ளி மட்டுமே பெற்றிருந்தன. ‘ரன்ரேட்’ அடிப்படையில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வாய்ப்பை பெற்றது.

இறுதிப்போட்டி

நாளை மறுதினம் ஆக்லாந்தில் நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் இரண்டு ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடம் மண்ணை கவ்வி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story