இந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது கேப்டன் கோலி பெற்றார்


இந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது கேப்டன் கோலி பெற்றார்
x
தினத்தந்தி 25 Feb 2018 11:15 PM GMT (Updated: 25 Feb 2018 8:03 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணி இந்தியா.

கேப்டவுன்,

ஆண்டுதோறும் ஏப்ரல் 3-ந்தேதி நிலவரப்படி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் சாம்பியன்ஷிப் பட்டத்துடன், ரூ.6½ கோடி பரிசுத்தொகை வழங்கப்படுவது வழக்கம். தற்போது டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்கா 115 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 104 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

அடுத்த ஒரு மாதத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளால் இந்திய அணியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அதாவது ஏப்ரல் 3-ந்தேதி அன்றும் இந்திய அணியே ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிப்பது உறுதியாகி விட்டதால், ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய கதாயுதம் மற்றும் ரூ.6½ கோடி ஊக்கத்தொகை இந்திய கேப்டன் கோலியிடம் வழங்கப்பட்டது. கேப்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் இதை ஐ.சி.சி. சார்பில் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், ஷான் பொல்லாக் ஆகியோர் வழங்கினர்.

விராட் கோலி கூறுகையில், ‘2-வது முறையாக இந்த கதாயுதத்தை பெறுவதை சிறப்பு வாய்ந்தாக கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களது வெற்றிப்பயணத்துக்கு கிடைத்த அங்கீகாரம் இது. கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் நாங்கள் விளையாடி வரும் விதம் உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. சிறப்பான ஆட்டமே தரவரிசையில் எதிரொலித்து இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள், பயிற்சி உதவியாளர்கள் மற்றும் ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு டெஸ்ட் அணியாக எங்களது 80 சதவீத திறமை தான் வெளிப்பட்டு இருக்கிறது என்று சொல்வேன். உலகத்தரம் வாய்ந்த அணியாக தொடர வேண்டும் என்றால், 100 சதவீதம் திறமையை காட்ட வேண்டும். அடுத்து வரும் தொடர்களை (இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்) ஆவலோடு எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.

Next Story