கேப்டவுன் நகர தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க இந்திய கிரிக்கெட் அணி நிதி உதவி


கேப்டவுன் நகர தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க இந்திய கிரிக்கெட் அணி நிதி உதவி
x
தினத்தந்தி 28 Feb 2018 1:15 PM GMT (Updated: 28 Feb 2018 1:15 PM GMT)

கேப்டவுன் நகர தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க இந்திய கிரிக்கெட் அணி நிதி உதவி அளித்துள்ளது. #ViratKohli

கேப்டவுன்,

தென்னாப்பிரிக்க தலைநகர் கேப் டவுனில் இந்த வருடம் மழை அளவு குறைந்துவிட்டது. இதனால் அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் தண்ணீரைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதோடு, மாநகர குடிநீர் வாரியம் கொடுக்கும் தண்ணீரை, வீட்டுத் தோட்டம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் தண்ணீர் பஞ்சம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் ;இங்குள்ள நீர்நிலைகள் ஏப்ரல் 12ம் தேதிக்குப் பிறகு தண்ணீரே இல்லாத அளவிற்கு வறண்டுவிடும் என்றும் முன்னெச்சரிக்கையாக, தண்ணீர் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தண்ணீர் பஞ்சத்தைப் போக்க கேப் டவுன் நகர நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. இந்த தண்ணீர் பஞ்சத்தை கேள்விப்பட்ட இந்திய அணியும் தன்னால் இயன்ற உதவியை அளிக்க முன்வந்தது.மேலும் தென் ஆப்பிரிக்க அணியும் இந்திய அணியுடன் இணைந்து உதவ முன்வந்தது. இதனால், இரு அணி வீரர்களும் கையொப்பம் இட்ட ஜெர்சிகளை (உடைகள்) ரசிகர்களிடம் ஏலத்தில் விற்பனை செய்து நிதி திரட்ட முடிவு செய்தனர்.

இதற்காக 3-வது டி 20 போட்டிக்கு முன்பாக ரசிகர்களிடம் தென் ஆப்பிரிக்க, இந்திய வீரர்கள் கையொப்பம் இட்ட ஜெர்சிகள் ஏலம் விடப்பட்டன. இதில் அந்நாட்டு மதிப்பின்படி ஒரு லட்சம் ராண்டர்கள் திரட்டப்பட்டன. இது இந்திய மதிப்பில் ரூ.5.5 லட்சமாகும்.

இதையடுத்து, இந்த தொகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய கேப்டன் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் இணைந்து, காசோலையை கிவ்வர்ஸ் அறக்கட்டளையிடம் நன்கொடையாக அளித்தனர்.கிவ்வர்ஸ் அறக்கட்டளை அமைப்பு, ஆப்பிரிக்க கண்டத்தில் நடக்கும் பேரிடர்களின் போது மக்களுக்கு உதவி வரும் தன்னார்வ அமைப்பாகும்.

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில்,  ''உலகில் கேப் டவுன் நகரம் மிகவும் அழகான நகரங்களில் ஒன்றாகும். நாங்கள் எப்போது இங்கு வந்து விளையாடினாலும், மக்கள் எங்களை அன்புடன் கவனிப்பார்கள். தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, எங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்தோம்' என்றார்.  

Next Story