முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்–ஹசன் விலகல்
நிதாஹாஸ் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 6–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கிறது.
டாக்கா,
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் நிதாஹாஸ் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 6–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த தொடருக்கான வங்காளதேச அணியின் கேப்டனாக ஆல்–ரவுண்டர் ஷகிப் அல்–ஹசன் நியமிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் உள்ளூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது இடது கை சுண்டு விரலில் காயம் அடைந்த ஷகிப் அல்–ஹசன் முத்தரப்பு தொடருக்குள் உடல்தகுதியை எட்டிவிடுவார் என்று அணி நிர்வாகம் நம்பியது. ஆனால் காயம் முழுமையாக குணமடையாததால் இந்த தொடரில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது விலகல், வங்காளதேச அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு பதிலாக மக்முதுல்லா அணியை வழிநடத்துவார். லிட்டான் தாஸ் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.