இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்க தோனி தயங்கினார்: வெங்சர்க்கார் பரபரப்பு தகவல்


இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்க தோனி தயங்கினார்: வெங்சர்க்கார் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 8 March 2018 8:24 AM GMT (Updated: 8 March 2018 8:24 AM GMT)

இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்க தோனி தயக்கம் காட்டியதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். #ViratKohli #MSdhoni

மும்பை,

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திலிப் வெங்சர்கார் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக பதவி வகித்தார். தேர்வுக்குழு தலைவராக இருந்த போது நடைபெற்ற சில நிகழ்வுகளை வெங்சர்க்கார் பகிர்ந்து கொண்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்சர்க்கார் கூறியதாவது:-

 “ஆஸ்திரேலியாவுக்கு வளரும் வீரர்களை கொண்ட அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விராட் கோலி உள்ளிட்ட 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் மட்டும் இடம் பெற்று இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் சில வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையிலும், விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 123 ரன்கள் அடித்தார்.

விராட் கோலியின் ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது. எனவே, விராட் கோலியை இந்திய அணியில் விளையாட தேர்வுசெய்யலாம் என்று நான் நினைத்தேன். நான் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பியதும், இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாட இருந்தது. இலங்கை செல்லும் இந்திய அணியில் விராட் கோலியை சேர்ப்பது சரியாக இருக்கும் என நான் நினைத்தேன். தேர்வுக்குழுவில் இருந்த ஏனைய 4 உறுப்பினர்களும் எனது முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்தனர். ஆனால், கோலியை பற்றி அதிகம் அறியாததால் அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனும் இந்திய அணியின் கேப்டன் தோனியும் தயக்கம் காட்டினர். ஆனால்,  விராட் கோலியை நான் பார்த்தேன், அவரை அணியில் சேர்க்கலாம் என்று அவர்களிடம் அறிவுறுத்தினேன். 

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய பத்ரிநாத்தை அணியில் சேர்க்க தோனியும் கிர்ஸ்டனும் ஆர்வமாக இருந்தனர் என்பதை நான் அறிந்துகொண்டேன். விராட் கோலியை அணியில் சேர்த்தால், பத்ரிநாத்தை அணியில் சேர்க்க முடியாத நிலை இருந்தது. 

அப்போது பிசிசிஐ பொருளாளராக இருந்த ஸ்ரீனிவாசன், எந்த அடிப்படையில் பத்ரிநாத்தை அணியில் சேர்க்கவில்லை என்று என்னிடம் வினவினார். வளரும் வீரர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது விராட் கோலியை நான் பார்த்தேன். விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடுகிறார். அதன் காரணமாக நான் அணிக்கு தேர்வு செய்தேன் என ஸ்ரீனிவாசனிடம் கூறினேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.  மேலும், இந்த சம்பவம் நடைபெற்ற சில தினங்களில்  தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து நான் விடுவிக்கப்பட்டு ஸ்ரீகாந்த் தேர்வுக்குழு தலைவராக கொண்டு வரப்பட்டதாகவும் வெங்சர்க்கார் தெரிவித்தார்.

Next Story