மனைவி புகார் இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு


மனைவி புகார் இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 March 2018 11:42 AM GMT (Updated: 9 March 2018 11:42 AM GMT)

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ஷமி மீது கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொல்கத்தா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணிக்காக 30 டெஸ்ட், 50 ஒரு நாள் போட்டி மற்றும் 7 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த 29 வயதான முகமது ஷமி தற்போது மேற்குவங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் வசித்து வருகிறார். முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஆயிரா (2½ வயது) என்ற பெண்குழந்தை உள்ளது.

களத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை வேகப்பந்து வீச்சால் மிரட்டி வரும் முகமது ஷமியின் இல்வாழ்க்கையில் திடீரென பெரும் புயல் வீசி இருக்கிறது.

முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹன் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி இருக்கும் அவர் ஒரு சில பெண்களுடன் ஷமி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும், அந்த பெண்களின் செல்போன் எண்களையும் வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஆன்-லைனில் முகமது ஷமி பெண்களுடன் காதல் ரசம் சொட்டும் வகையில் உரையாடிய பதிவுகளின் ஆதாரத்தையும் அந்த பதிவில் அம்பலப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் முகமதுசமி மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஹசின்ஜஹன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

முகமதுசமி, பாகிஸ்தானை சேர்ந்த அலி‌ஷபா என்ற பெண்ணிடம் பணம் வாங்கினார். மேட்ச் பிக்சிங் சூதாட்டத்துக்காக இந்த பணம் கொடுக்கப்பட்டு இருக்கலாம். எதற்காக பணம் கொடுக்கப்பட்டது என்று என்னிடம் முகமது சமி கூறவில்லை.

முகமதுசமி, மனைவியான என்னை ஏமாற்றும்போது நாட்டை ஏன் ஏமாற்றி இருக்க மாட்டார். முகமது சமி பணம் வாங்கியதற்காக ஆதாரம் இருக்கிறது.
துபாய் ஓட்டலில் அவர் பாகிஸ்தான் பெண் அலி‌ஷபாவை சந்தித்தார். அந்த ஓட்டலில் அவர் அறை புக் செய்தாரா? இல்லையா? என்பதை சோதித்து பாருங்கள் என்று கூறி உள்ளார்.

 ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் நேற்று முறைப்படி புகார் அளித்தார். அவரின்  புகாரின் அடிப்படையில்  கொல்கத்தா போலீசார்  ஷமி மீது குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்துதல், கொலை முயற்சி, காயப்படுத்துதல், கற்பழிப்பு, துன்புறுத்துதல் போன்ற 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story