முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேசம் இலங்கையை வீழ்த்தியது


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேசம் இலங்கையை வீழ்த்தியது
x
தினத்தந்தி 16 March 2018 10:00 PM GMT (Updated: 16 March 2018 9:07 PM GMT)

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் வங்காளதேச அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கொழும்பு,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் வங்காளதேச அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இலங்கை 159 ரன்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர், இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி(3 வெற்றி, ஒரு தோல்வி) ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் நேற்றிரவு நடந்த கடைசி லீக்கில் இலங்கை - வங்காளதேச அணிகள் சந்தித்தன. விரலில் ஏற்பட்ட காயத்தால் முதல் 3 ஆட்டங்களில் ஆடாத வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பினார். அபு ஹைதர் நீக்கப்பட்டார். இலங்கை அணியில் இரு மாற்றமாக சமீரா, சுரங்கா லக்மல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுரு உதனா, அமிலா அபோன்சா சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேசம் முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 41 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (8.1 ஓவர்) இழந்து திணறியது. இதன் பின்னர் விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும் (61 ரன், 40 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் திசரா பெரேராவும் (58 ரன், 37 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் அடித்து தங்கள் அணியை தூக்கி நிறுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் அரைசதம் (50 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசிய போதிலும் முஷ்பிகுர் ரஹிம் (28 ரன்), கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (7 ரன்) சீக்கிரம் நடையை கட்டினர். கடைசி ஓவரில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தது.

வங்காளதேசம் திரில் வெற்றி

உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் உதனா வீசினார். முதல் 2 பந்தில் அவர் ரன் ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை. அதே நேரத்தில் முஸ்தாபிஜூர் ரகுமான் (0) ரன்-அவுட் ஆனார். 3-வது பந்தை சந்தித்த மக்முதுல்லா பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பித்த மக்முதுல்லா 2 ரன் எடுத்தார். இதையடுத்து 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை மக்முதுல்லா அட்டகாசமாக சிக்சருக்கு பறக்கவிட, உள்ளூர் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

வங்காளதேச அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. மக்முதுல்லா 43 ரன்களுடன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்குள் (2 வெற்றி, 2 தோல்வி) நுழைந்தது. வெற்றியை, வங்காளதேச வீரர்கள் பாம்பு நடனம் ஆடி கொண்டாடினர். இலங்கை அணி (ஒரு வெற்றி, 3 தோல்வி) பரிதாபமாக வெளியேற்றப்பட்டது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

Next Story