முத்தரப்பு டி20 கிரிக்கெட் : வீரர்கள் மோதல், வங்காளதேச அணியினரின் ஓய்வு அறை கண்ணாடி கதவு உடைப்பு


முத்தரப்பு டி20 கிரிக்கெட் : வீரர்கள் மோதல், வங்காளதேச அணியினரின் ஓய்வு அறை கண்ணாடி கதவு உடைப்பு
x
தினத்தந்தி 17 March 2018 6:48 AM GMT (Updated: 17 March 2018 6:48 AM GMT)

முத்தரப்பு டி20 கிரிக்கெட்டில் வீரர்கள் இடையே மோதல், வங்காளதேச அணியினரின் ஓய்வு அறை கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது. #NidahasTrophy #BanvsSL #GlassBroken

கொழும்பு,

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மோதலால் ஏற்பட்ட பரபரப்பிற்கிடையே வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றது.

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர், இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி(3 வெற்றி, ஒரு தோல்வி) ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் நேற்றிரவு நடந்த கடைசி லீக்கில் இலங்கை - வங்காளதேச அணிகள் சந்தித்தன. விரலில் ஏற்பட்ட காயத்தால் முதல் 3 ஆட்டங்களில் ஆடாத வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பினார். அபு ஹைதர் நீக்கப்பட்டார். இலங்கை அணியில் இரு மாற்றமாக சமீரா, சுரங்கா லக்மல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுரு உதனா, அமிலா அபோன்சா சேர்க்கப்பட்டனர்.

முதலில் விளையாடிய இலங்கை அணி 41 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (8.1 ஓவர்) இழந்து திணறியது. இதன் பின்னர் விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும் (61 ரன், 40 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் திசரா பெரேராவும் (58 ரன், 37 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் அடித்து தங்கள் அணியை தூக்கி நிறுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர் தமிம் இக்பால் 50 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். கடந்த இரு போட்டிகளில் 70க்கும் மேல் ரன் அடித்த முஸ்பிகிர் ரஹிம் நேற்று 28 ரன்னில் அவுட்டானார். கடைசி ஓவரில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தது.

உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் உதனா வீசினார். முதல் 2 பந்தில் அவர் ரன் ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை. அதே நேரத்தில் முஸ்தாபிஜூர் ரகுமான் (0) ரன்-அவுட் ஆனார். 3-வது பந்தை சந்தித்த மக்முதுல்லா பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பித்த மக்முதுல்லா 2 ரன் எடுத்தார். இதையடுத்து 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை மக்முதுல்லா அட்டகாசமாக சிக்சருக்கு பறக்கவிட, உள்ளூர் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இதனிடையே கடைசி ஓவரை வீசிய இஸ்ரு உடானா முதல் பந்தை தோள்பட்டைக்கு மேலே போட்டார். இருப்பினும் அம்பயர் நோ-பால் கொடுக்கவில்லை. 2வது பந்தும் அதே மாதிரி தோள்பட்டைக்கு மேல் வீசினார். அப்போது ரன் எடுக்க ஓடி முஸ்டபிஜுர் ரகிம் ரன் அவுட்டானார். ரன் அவுட் ஒருபக்கம் இருந்தாலும், அதற்கு 2வது அம்பயர் நோ பால் கொடுத்துள்ளார்.
ஆனால் முதல் அம்பயரோ அதை கவனிக்காமல் நோபால் கொடுக்க மறுத்தார்.

இதனால் வங்கதேச வீரர்கள் நோபால் கொடுக்க வாதிட்டனர். மேலும் தண்ணீர் கொடுக்க வந்த வங்கதேச வீரர் இலங்கை கேப்டனிடம் ஏதோ கூறியதாக மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.  போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணியினர் ஒன்றாக சேர்ந்து நாகினி ஆட்டம் போட்டனர்.

இந்நிலையில் வங்கதேச வீரர்கள் இருந்த ஓய்வு அறை கண்ணாடி​யை யாரோ ஒரு வீரர் உடைத்துள்ளார். அதை அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து வங்கதேச வீரர்களிடம் நஷ்ட ஈடு கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

Next Story