இரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா அணி 800 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’


இரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா அணி 800 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
x
தினத்தந்தி 17 March 2018 9:56 PM GMT (Updated: 17 March 2018 9:56 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் விதர்பா–ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

நாக்பூர்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் விதர்பா–ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 208 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 702 ரன்கள் எடுத்து இருந்தது. அபூர்வ் வான்கடே 99 ரன்னுடனும், ஆதித்யா சர்வாத் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 226.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 800 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வாசிம் ஜாபர் 286 ரன்னும், கணேஷ் சதீஷ் 120 ரன்னும் எடுத்தனர். அபூர்வ் வான்கடே 157 ரன்னுடனும் (221 பந்துகளில் 16 பவுண்டரி, 6 சிக்சருடன்), குர்பானி 22 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அந்த அணி 98 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் சமர்த் ரன் எதுவும் எடுக்காமலும், மயங்க் அகர்வால் 11 ரன்னிலும், பிரித்வி ஷா 51 ரன்னிலும், கேப்டன் கருண் நாயர் 21 ரன்னிலும், ஸ்ரீகர் பாரத் ரன் எதுவும் எடுக்காமலும், ஆர்.அஸ்வின் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 7–வது விக்கெட்டுக்கு ஜெயந்த் யாதவ், ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேற்றைய ஆட்டம் நேரம் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 77 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. ஹனுமா விஹாரி 81 ரன்னுடனும், ஜெயந்த் யாதவ் 62 ரன்னுடனும் களத்தில் நின்றனர். 7–வது விக்கெட்டுக்கு இருவரும் 138 ரன்கள் சேர்த்துள்ளனர். விதர்பா அணி தரப்பில் ராஜ்னேஷ் குர்பானி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சே முடியாததால் இந்த ஆட்டம் டிராவில் முடிவது உறுதியாகி விட்டது. கடைசி நாளில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் எஞ்சிய 4 விக்கெட்டை வீழ்த்தி விட்டால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கோப்பையை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story