முகமது ‌ஷமி துபாயில் தங்கி இருந்தது உண்மை தான் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்


முகமது ‌ஷமி துபாயில் தங்கி இருந்தது உண்மை தான் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்
x
தினத்தந்தி 20 March 2018 8:45 PM GMT (Updated: 20 March 2018 8:06 PM GMT)

முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் அவரது மனைவி பரபரப்பான புகார் கூறினார்.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பான புகார் கூறினார். இது குறித்து கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

‘‘முகமது ‌ஷமி தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்ததும் மற்ற வீரர்களை போல் உடனடியாக தாயகம் திரும்பவில்லை, அவர் அங்கிருந்து துபாய்க்கு சென்றார். அங்கு இங்கிலாந்து தொழிலதிபர் கொடுத்த பணத்தை பாகிஸ்தான் மாடல் அழகி அலிஷ்பா மூலம் வாங்கி வந்தார். அலிஷ்பாவுடன் முகமது ‌ஷமிக்கு நீண்ட காலமாக தொடர்பு உண்டு. அவர் முகமது ‌ஷமியின் ரசிகை அல்ல. காதலி. அலிஷ்பா எனது குடும்ப வாழ்க்கையை நாசமாக்க முயற்சித்தார். ‌ஷமி கிரிக்கெட் முறைகேட்டிலும் ஈடுபட்டார்’ என்ற திடுக்கிடும் தகவலையும் ஹசின் ஜஹன் வெளியிட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் முகமது ‌ஷமி துபாயில் கடந்த மாதம் 17, 18–ந்தேதிகளில் தங்கி இருந்தது உண்மை தான் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரது பயண விவரங்களை கொல்கத்தா போலீசுக்கு கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ளது. இதையடுத்து கொல்கத்தா போலீசின் விசாரணை தீவிரமாகியுள்ளது.

இதற்கிடையே முகமது ‌ஷமியின் மனைவி குற்றம் சாட்டிய பாகிஸ்தான் மாடல் அழகி அலிஷ்பா, ‘முகமது ‌ஷமியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவள். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு.

எனது சகோதரியை பார்ப்பதற்காக நான் அடிக்கடி துபாய்க்கு செல்வேன். வழக்கம் போல் எனது சகோதரியை பார்க்க துபாய்க்கு சென்ற போது, யதார்த்தமாக முகமது ‌ஷமியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள ஓட்டலில் அவருடன் காலை உணவு சாப்பிட்டேன். ரசிகையாக நான் அவருக்கு வாழ்த்து தகவல்கள் அனுப்புவேன். மற்றபடி அவருக்கு பணம் எதுவும் நான் வழங்கவில்லை.’ என்று கூறியுள்ளார்.


Next Story