தகுதி சுற்று கிரிக்கெட்- அமீரக அணியிடம் ஜிம்பாப்வே அதிர்ச்சி தோல்வி


தகுதி சுற்று கிரிக்கெட்- அமீரக அணியிடம் ஜிம்பாப்வே அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 22 March 2018 10:45 PM GMT (Updated: 22 March 2018 8:15 PM GMT)

அமீரக அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்தது.

ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் அமீரக அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே-ஐக்கிய அரபு அமீரக அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 47.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழையால் 2 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டதால் அத்துடன் அமீரக அணியின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறைப்படி ஜிம்பாப்வே அணி 40 ஓவர்களில் 230 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒற்றை இலக்கில் பெவிலியன் திரும்பினாலும், பீட்டர் மூர் (39 ரன்), சிகந்தர் ராசா (34 ரன்), சீன் வில்லியம்ஸ் (80 ரன்) ஆகியோர் மிடில் வரிசையில் வலு சேர்த்தனர். இதில் சீன் வில்லியம்ஸ் அடித்த ஷாட்டை, அமிர் ஹயாத் ஒற்றைக்கையால் கேட்ச் செய்து பிரமிக்க வைத்தார். வில்லியம்ஸ் ஆட்டம் இழந்ததும் ஜிம்பாப்வேயின் நம்பிக்கை தளர்ந்தது.

கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது நவீத் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணிக்கு 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை தேடித்தந்தார். ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் ஜிம்பாப்வேயின் உலக கோப்பை கனவு ஏறக்குறைய தகர்ந்தது. ஜிம்பாப்வே அணி 1979-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் கால்பதிக்க முடியாத பரிதாபத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

சூப்பர் சிக்ஸ் சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தலா 4 புள்ளிகளுடன் உள்ள இவ்விரு அணிகளில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும். ஒரு வேளை இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். ஆனால் ரன்ரேட்டில் அயர்லாந்து முன்னிலையில் இருப்பதால் அந்த அணிக்கே அதிர்ஷ்டம் கிட்டுமே தவிர, ஜிம்பாப்வேக்கு வாய்ப்பில்லை.

அதே சமயம் அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் ஆட்டம் மிக குறைவான ஸ்கோரில் டையில் (சமன்) முடிந்தால் ஜிம்பாப்வேக்கு சிறிய வாய்ப்பு இருக்கிறது.

Next Story