தெண்டுல்கரின் கோரிக்கை ஏற்று இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றம்


தெண்டுல்கரின் கோரிக்கை ஏற்று இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றம்
x
தினத்தந்தி 23 March 2018 1:07 AM GMT (Updated: 23 March 2018 1:07 AM GMT)

தெண்டுல்கரின் கோரிக்கையை ஏற்று இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #SachinTendulkar


கொச்சி, 

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. இதில் ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நவம்பர் 1–ந் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. 

கொச்சி மைதானத்தில் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து மற்றும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. கொச்சி ஸ்டேடியம் உலக தரம் வாய்ந்த கால்பந்து மைதானமாக உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில் அங்கு கிரிக்கெட் போட்டி நடத்தினால் மைதானம் சேதம் அடையும். எனவே இந்த போட்டியை கேரள மாநிலத்தில் மற்றொரு மைதானம் அமைந்துள்ள திருவனந்தபுரத்துக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். 

அவரது கோரிக்கையை ஏற்று இந்த போட்டியை திருவனந்தபுரத்துக்கு மாற்ற கேரளா மாநிலம் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. கேரள மாநில விளையாட்டு மந்திரி மொய்தீன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 


Next Story