‘ஆஸ்திரேலிய வீரர்கள் மீது ஐ.சி.சி. சரியான நடவடிக்கை எடுக்கவில்லை’ ஹர்பஜன்சிங், கெவின் பீட்டர்சன் எதிர்ப்பு


‘ஆஸ்திரேலிய வீரர்கள் மீது ஐ.சி.சி. சரியான நடவடிக்கை எடுக்கவில்லை’ ஹர்பஜன்சிங், கெவின் பீட்டர்சன் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 March 2018 10:15 PM GMT (Updated: 26 March 2018 8:40 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தனது ஆலோசனையின் படி தான் நடந்தது என்று தவறை ஒப்புக்கொண்ட கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு, முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தனது ஆலோசனையின் படி தான் நடந்தது என்று தவறை ஒப்புக்கொண்ட கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு, முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்தின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் செயல்பட்ட ஸ்டீவன் சுமித் உள்ளிட்ட வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அத்துடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் அளித்து வரும் நிறுவனங்களும் தங்களது ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யலாமா? என்று ஆலோசித்து வருகின்றன.

மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஸ்டீவன் சுமித்துக்கு ஒரு டெஸ்டில் மட்டும் விளையாட தடை விதித்து எடுத்த முடிவுக்கும் முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), மைக்கேல் வாகன் (இங்கிலாந்து), இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கெவின் பீட்டர்சன், மைக்கேல் வாகன் ஆகியோர் தங்கள் பதிவில், ‘ஸ்டீவன் சுமித்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிகவும் பலவீனமானது. அவருக்கு கடும் தண்டனை அளித்து இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். ஹர்பஜன்சிங் தனது பதிவில், ‘ஐ.சி.சி.யின் நடவடிக்கை ரொம்ப நல்லா இருக்கு. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார் என்பதற்கு ஆதாரம் இருந்தும் அவருக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. 2001-ம் ஆண்டு இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க பயணத்தின் போது தெண்டுல்கர் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு எதிரொலியாக 6 வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெண்டுல்கர், ஷேவாக்குக்கு தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் ஆதாரம் இருந்தும் பான் கிராப்ட் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?. ஆஸ்திரேலிய அணியினருக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story