ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக லீமான் அறிவிப்பு


ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக லீமான் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 March 2018 8:45 PM GMT (Updated: 29 March 2018 7:41 PM GMT)

பந்தை சேதப்படுத்திய பிரச்சினையால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியே நிலைகுலைந்து போய் விட்டது.

ஜோகன்னஸ்பர்க்,

பந்தை சேதப்படுத்திய பிரச்சினையால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியே நிலைகுலைந்து போய் விட்டது. ஏற்கனவே ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ஓரங்கட்டப்பட்ட நிலையில், அந்த அணிக்கு மேலும் ஒரு இடியாக தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

48 வயதான லீமான் நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நிருபர்களிடம் கண்ணீர் மல்க பேசினார். ‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியே நான் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கடைசி போட்டியாகும். அதன் பிறகு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடைபெறுகிறேன். மீடியாக்களின் முன்னிலையில் ஸ்டீவன் சுமித் கண்ணீர் விட்டு அழுததை பார்த்து நான் உண்மையிலேயே நொந்து போய் விட்டேன். அணியின் மற்ற வீரர்களும் வேதனைக்குள்ளானார்கள். நேற்று முன்தினம் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று சொன்னேன். ஆனால் இன்று (நேற்று) ஸ்டீவன் சுமித், கேமரூன் பான்கிராப்ட் எந்த அளவுக்கு மனரீதியாக காயமடைந்திருக்கிறார்கள் என்பதை பார்த்த பிறகு, பயிற்சியாளர் பதவியை விட்டு விலகுவது மட்டுமே நியாயமான முடிவாக இருக்கும் என்ற நிலைக்கு வந்து விட்டேன். இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை’ என்றார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியின் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, மறுபடியும் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் லீமான் கேட்டுக் கொண்டார்.

லீமான் 5 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2015–ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியதும், இரண்டு முறை ஆ‌ஷஸ் தொடரை வசப்படுத்தியதும் குறிப்பிடத்தக்க வெற்றிகளாகும்.


Next Story