சுமித், வார்னருக்கு தடை விதித்தது சரியான நடவடிக்கை தெண்டுல்கர் கருத்து


சுமித், வார்னருக்கு தடை விதித்தது சரியான நடவடிக்கை தெண்டுல்கர் கருத்து
x
தினத்தந்தி 29 March 2018 9:00 PM GMT (Updated: 29 March 2018 7:45 PM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்த நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்றுள்ளார்.

புதுடெல்லி,

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாதமும், கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்த நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘கிரிக்கெட் ஜென்டில்மேன் ஆட்டம் என்பதை எல்லோரும் அறிவார்கள். நேர்மையான முறையில் விளையாடக்கூடிய ஆட்டம் இது என்பதை நான் நம்புகிறேன். என்ன நடந்ததோ? அது துரதிருஷ்டவசமானது. ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தின் கண்ணியத்தை நிலைநாட்ட சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி முக்கியமானது தான். அதேநேரத்தில் எந்தவழியில் வெற்றி பெறுகிறோம் என்பது அதை விட மிகவும் முக்கியமானது’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வீரர்களின் ஒழுங்கீனமான செயல்பாடு, பந்தை சேதப்படுத்துதல் விவகாரம் தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசீலனை செய்ய தொடங்கி இருக்கிறது. பந்தின் தன்மையை மாற்றுவதை மிகப்பெரிய குற்றமாக கணக்கில் எடுத்து கொள்ள ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் ஐ.சி.சி.கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.


Next Story