ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா பவுலர் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் விலகல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா பவுலர் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் விலகல்
x
தினத்தந்தி 30 March 2018 9:00 PM GMT (Updated: 30 March 2018 8:04 PM GMT)

ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆடவில்லை.

ஜோகன்னஸ்பர்க்,

ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆடவில்லை. அவருக்கு வலது முழங்காலுக்கு கீழ் பகுதியில் அழுத்தத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்தும் அவர் விலகியிருக்கிறார். 28 வயதான மிட்செல் ஸ்டார்க், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.9.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.

பிரதான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டார்க் இல்லாதது, கொல்கத்தா அணிக்கு பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவதால் தொடக்க ஆட்டத்தில் இருந்தே விளையாட முடியுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பவுலிங் செய்த போது பந்தை எறிவதாக நடுவர்கள் புகார் கூறினர். இருப்பினும் ஐ.பி.எல்.–ல் அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐ.பி.எல். போட்டியில் அவரது பந்து வீச்சு நடுவர்களால் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.

ஏப்ரல் 7–ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகும் 3–வது ஆஸ்திரேலிய நாட்டவர் ஸ்டார்க் ஆவார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story