காவிரி மேலாண்மை வாரியம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் வர்ணனையாளர் பணியை தவிர்த்த ஆர்.ஜே.பாலாஜி


காவிரி மேலாண்மை வாரியம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் வர்ணனையாளர் பணியை தவிர்த்த ஆர்.ஜே.பாலாஜி
x
தினத்தந்தி 11 April 2018 1:19 AM GMT (Updated: 11 April 2018 1:19 AM GMT)

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் வர்ணனையாளர் பணியை ஆர்.ஜே.பாலாஜி தவிர்த்தார்.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான டெலிவிஷன் தமிழ் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முதலாவது ஆட்டத்தின் போது கருப்பு சட்டை அணிந்து வர்ணனை பணியை கவனித்தார். நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது வர்ணனையாளர் பணிக்கு அவர் வரவில்லை. இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் சூழலில், இன்றைய (நேற்று) ஆட்டத்தில் வர்ணனையாளர் பணியை நான் செய்யவில்லை. ஒரு தமிழனாக எனது பங்களிப்பு இது. எனது உணர்வையும், என்னுடைய மக்களின் உணர்வையும் புரிந்து கொண்ட சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘நாம் 234 எம்.எல்.ஏ.க்களையும், 40 எம்.பி.க்களையும் ஓட்டு போட்டு அனுப்பி இருக்கிறோம். ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால் இவர்கள் அனைவரும் ராஜினாமா செய்யலாம். ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று எல்லாருமே திரும்பி பார்ப்பார்கள். உடனே தேர்தலை அறிவிப்பார்கள். அதில் யாரும் நிற்காதீர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தேர்தலில் நிற்கமாட்டோம் என்று போராடினால், சரியாக இருக்கும். ஏனெனில் நாம் ஓட்டு போட்டது இவர்களுக்கு தானே தவிர, டோனிக்கு அல்ல’ என்றார்.

Next Story