சென்னை ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் ; சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வருத்தம்


சென்னை ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் ;  சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வருத்தம்
x
தினத்தந்தி 12 April 2018 8:16 AM GMT (Updated: 12 April 2018 8:16 AM GMT)

சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது . இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். #IPL2018 #CSK

சென்னை,

சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடைபெற்றது. இதனால் மைதானம் அமைந்து உள்ள சேப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மோசமான நிலை ஏற்பட்டது. போராட்டம் நடத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

 இதற்கிடையே சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் வெளியாகியது.  

சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகளுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஏப். 14ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

இதை தொடர்ந்து சென்னையில் விளையாட முடியாமல்போனது வருத்தமளிக்கிறது' என்று இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 ட்விட்டரில், தமிழில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், 'சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ்ப் பாசமும் நேசமும் கிடைக்காது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடமிருந்து விடைபெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்' என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல, சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் ட்விட்டர் பதிவில், 

'சென்னையிலிருந்து இன்று செல்வது வருத்தமாக உள்ளது. பிரச்சினைகள் தீர்ந்து, அமைதியான நிலை திரும்பும் என்று நம்புகிறேன். எங்கள் அணிக்கு சிறந்த வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார். அதேபோல, பில்லிங், ஷேன்வாட்சன், இம்ரான் தாஹிர், மைக் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் சென்னையில் விளையாட முடியாமல் போனது வருத்தமளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.


Next Story