இது சென்னை சூப்பர் கிங்ஸ்; புனே சூப்பர் கிங்ஸ் அல்ல - டோனி


இது சென்னை சூப்பர் கிங்ஸ்; புனே சூப்பர் கிங்ஸ் அல்ல - டோனி
x
தினத்தந்தி 21 April 2018 11:15 PM GMT (Updated: 21 April 2018 8:55 PM GMT)

இது சென்னை சூப்பர் கிங்ஸ்; புனே சூப்பர் கிங்ஸ் அல்ல என ரசிகர்களின் ஆதரவு குறித்து டோனி கருத்து தெரிவித்தார்.

புனே,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு புனேயில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. ஷேன் வாட்சன் 106 ரன்களும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), சுரேஷ் ரெய்னா 46 ரன்களும் விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் அதிக முறை (14) 200 ரன்களை கடந்த அணி என்ற சிறப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது.

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில், ‘பொதுவாக நாங்கள் எப்போதும் சற்று பின்தங்கி வந்தே அதன் பிறகு வெற்றிக்கனியை பறிப்போம். ஆனால் இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே எங்களது கை ஓங்கி விட்டது. இது புதிய அனுபவமாக தோன்றுகிறது. எங்கள் அணியில் பலர் 30 வயதை கடந்தவர்கள் என்பதால் உடல்தகுதியை சீரான அளவில் தக்கவைப்பது முக்கியமாகும். எங்களிடம் சிறந்த பீல்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் நல்ல உடல்தகுதியுடன் நீடிப்பது அவசியமாகும்.

ரசிகர்களின் ஆதரவு குறித்து கேட்கிறீர்கள். நான் முன்பு இங்கு புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடிய போது அவர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. ஆனால் தற்போது புனே ரசிகர்களின் ஆதரவு சென்னை அணிக்கா? மற்ற அணிகளுக்கா? என்பது அவர்களின் முடிவை பொறுத்தது. ஆனால் 7 ஆட்டங்களின் இறுதியில் நீங்கள் நிறைய மஞ்சள் நிற உடையுடன் கூடிய ரசிகர்கள் கூட்டத்தை மைதானத்தில் பார்ப்பீர்கள். இன்னொரு விஷயம், இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே தவிர, புனே சூப்பர் கிங்ஸ் அல்ல’ என்றார்.

Next Story