வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கும் பேட்ஸ்மேன்கள் இளம் வீரர்களுடன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்


வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கும் பேட்ஸ்மேன்கள் இளம் வீரர்களுடன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 26 April 2018 9:30 PM GMT (Updated: 26 April 2018 9:09 PM GMT)

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்களை சேசிங் செய்த பிறகு பேசிய சென்னை கேப்டன் டோனி, ‘வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கும் பேட்ஸ்மேன்கள் அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வது முக்கியம்’ என்றார்.

பெங்களூரு, 

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்களை சேசிங் செய்த பிறகு பேசிய சென்னை கேப்டன் டோனி, ‘வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கும் பேட்ஸ்மேன்கள் அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வது முக்கியம்’ என்றார்.

டோனி கலக்கல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 பந்து மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் 5-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி டிவில்லியர்ஸ் (8 சிக்சருடன் 68 ரன்), குயின்டான் டி காக் (53 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 74 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (9 ஓவர்) தாரைவார்த்து தத்தளித்த போதிலும் அம்பத்தி ராயுடுவும், கேப்டன் டோனியும் அணியை தூக்கி நிமிர்த்தினர். அம்பத்தி ராயுடு 82 ரன்களில் (3 பவுண்டரி, 8 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. கோரி ஆண்டர்சன் வீசிய இறுதி ஓவரில் வெய்ன் பிராவோ முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் சிக்சரும், 3-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். அடுத்த பந்தை எதிர்கொண்ட டோனி பந்தை அட்டகாசமாக சிக்சருக்கு பறக்கவிட்டு சுபமாக போட்டியை முடித்து வைத்தார். 70 ரன்களுடன் (34 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் நின்ற டோனியே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சொல்வது என்ன?

வெற்றிக்கு பிறகு சென்னை கேப்டன் 36 வயதான டோனி கூறியதாவது:-

டிவில்லியர்சின் அதிரடியையும், அந்த அணி 200 ரன்களை கடந்ததையும் பார்த்த போது இலக்கை விரட்டிப்பிடிப்பது கடினம் என்றே தோன்றியது. அவர்கள் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து விட்டதாக கருதினேன். டிவில்லியர்சின் பேட்டிங் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்க முடிந்தது. ஏனெனில் ஆடுகளத்தன்மை சற்று வேகமின்றி காணப்பட்டது. அப்படிப்பட்ட சூழலிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக டிவில்லியர்ஸ் நன்றாக ஆடினார்.

எங்கள் அணியில் சில முன்னணி வீரர்கள் சீக்கிரமாகவே ஆட்டம் இழந்ததால் தடுமாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சிறிய மைதானம், பேட்டில் பட்ட பந்துகள் சிக்சருக்கு ஓடும் விதம், ஓரளவு காணப்பட்ட பனியின் தாக்கம் இவற்றை எல்லாம் எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம்.

அனுபவம் முக்கியம்

பெரிய இலக்கை சேசிங் செய்யும் போது, அடுத்து எந்த பவுலரை கேப்டன் பயன்படுத்துவார்? யாருக்கு ஓவர் எஞ்சியிருக்கிறது, இந்த ஆடுகளத்தன்மையில் எதிரணியின் சிறந்த பவுலர் யார் என்பதை கணித்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டியது முக்கியம். அதே சமயம் இந்த மாதிரியான போட்டிகளில் சில நேரம் வெற்றி கிடைக்கலாம். சில போட்டிகள் தோல்வியில் முடியலாம்.

ஆனால் வெற்றிகரமாக ஆட்டத்தை முடிப்பவர்களின் முக்கிய பணி, இளம் வீரர்களுடன் அல்லது எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேன்களுடன் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்வது ஆகும். ஏனெனில் நாளை நான் குறிப்பிட்ட பேட்ஸ்மேன் உடன் பேட் செய்ய முடியாமல் போகலாம் அல்லது அவுட் ஆகி விடலாம். அப்போது இந்த அனுபவங்கள் இளம் வீரர்கள் கச்சிதமாக ஆட்டத்தை முடிப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த ஆட்டத்தில் அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. என்னுடன் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்ததுடன், அணியின் ஸ்கோர் உயர்விலும் முக்கிய பங்கு வகித்தார். சிறிய மைதானம் அவருக்கு ஏற்றதாக அமைந்தது.

இவ்வாறு டோனி கூறினார்.

Next Story