பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடே வெற்றிக்கு காரணம்’


பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடே வெற்றிக்கு காரணம்’
x
தினத்தந்தி 27 April 2018 9:30 PM GMT (Updated: 27 April 2018 9:07 PM GMT)

‘பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடே காரணம்’ என்று அந்த அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் தெரிவித்தார்.

ஐதராபாத், 

‘பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடே காரணம்’ என்று அந்த அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் தெரிவித்தார்.

ஐதராபாத் அணி 5-வது வெற்றி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்ததுடன் முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

முதலில் ஆடிய ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 54 ரன்னும், ஷகிப் அல்-ஹசன் 28 ரன்னும், யூசுப் பதான் ஆட்டம் இழக்காமல் 21 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அங்கித் ராஜ்பூத் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 119 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (32 ரன்கள்), கெய்ல் (23 ரன்கள்) ஆகியோர் அளித்த நல்ல தொடக்கத்தை பின்னர் வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஐதராபாத் அணி தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, பாசில் தம்பி, ஷகிப் அல்-ஹசன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

வெற்றிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் அளித்த பேட்டியில், ‘இந்த ஆடுகளத்தில் 145 முதல் 155 ரன்கள் எடுத்தாலே சவாலான ஸ்கோராகும். எங்கள் பேட்ஸ்மேன்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். பஞ்சாப் அணியின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் கடினமாக போராடி எதிரணியை குறைந்த ஸ்கோருக்குள் மடக்கியது பாராட்டுக்குரியது. பவர்பிளேயில் எங்களது பந்து வீச்சு மோசமாக இருந்தாலும், பின்னர் அருமையாக அமைந்தது. இந்த வெற்றி பந்து வீச்சாளர்களால் வந்தது. அதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்களிப்பு முக்கியமாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

அஸ்வின் கருத்து

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கருத்து தெரிவிக்கையில், ‘நல்ல நிலையில் இருந்து நாங்கள் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. 20 ஓவர் போட்டியில் இதுபோன்று நடக்க தான் செய்யும். பீல்டிங்கில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். மின்னொளியில் பந்தை பிடிப்பது கடினம் தான். அதற்காக கேட்ச்சை தவற விட்டதற்கு எந்த காரணமும் சொல்ல முடியாது. தொழில்முறை வீரர்களான நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமானதாகும். அடுத்த ஆட்டத்தில் வலுவாக திரும்புவோம். ரஷித் கான் நன்றாக பந்து வீசினார். உலக தரம் வாய்ந்த வீரரான அவர் மிடில் ஓவரில் எங்கள் விக்கெட்டுகளை சாய்த்தார்’ என்றார்.

Next Story