டெல்லி அணியிடம் வீழ்ந்தது கொல்கத்தா: ‘பீல்டிங்கில் சரியாக செயல்படாததால் பாதிப்பு’ கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து


டெல்லி அணியிடம் வீழ்ந்தது கொல்கத்தா: ‘பீல்டிங்கில் சரியாக செயல்படாததால் பாதிப்பு’ கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து
x
தினத்தந்தி 28 April 2018 9:30 PM GMT (Updated: 28 April 2018 8:48 PM GMT)

‘டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கில் சரியாக செயல்படாதது தோல்விக்கு முக்கிய காரணம்’ என்று கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

‘டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கில் சரியாக செயல்படாதது தோல்விக்கு முக்கிய காரணம்’ என்று கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

டெல்லி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை ஊதித்தள்ளியது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 93 ரன்கள் (40 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசினர். ஐ.பி.எல்.-ல் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த கேப்டன் (10 சிக்சர்), கேப்டனாக அறிமுகம் ஆன இன்னிங்சிலேயே அதிக ரன்கள் எடுத்தவர் ஆகிய சாதனைகளை ஸ்ரேயாஸ் அய்யர் இந்த ஆட்டத்தின் மூலம் பெற்றார்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் ஆந்த்ரே ரஸ்செல் (44 ரன்), சுப்மான் கில் (37 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.

ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் அய்யர்

டெல்லி அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பிறகு அவர் கூறுகையில், ‘அணிக்கு தலைமை தாங்கிய முதல் ஆட்டத்திலேயே வெற்றி கண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அணியின் வெற்றிக்கு நான் மட்டுமல்ல, எல்லோருமே சிறப்பான பங்களிப்பை அளித்தனர். டாஸில் தோற்றதை உண்மையிலேயே நல்லது என்றே நினைக்கிறேன். ஏனெனில் ‘டாஸ்’ ஜெயித்து இருந்தால் நாங்களும் முதலில் பவுலிங்கைத் தான் தேர்வு செய்து இருப்போம். முதலில் பேட்டிங் செய்ததால் எங்களால் நெருக்கடியின்றி சுதந்திரமாக ஆட முடிந்தது.

கடைசி 90 ரன்களை நாங்கள் அதிரடியாக சேர்த்த விதம் திருப்தி அளிக்கிறது. இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே பிரித்வி ஷா பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். பிரித்வி ஷாவும் (62 ரன்), காலின் முன்ரோவும் (33 ரன்), நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தது பயனுள்ளதாக அமைந்தது. லியாம் பிளங்கெட், சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பந்துவீசக்கூடிய ஒரு பவுலர். அவர் என்னிடம் வந்து 16 அல்லது 17-வது ஓவரையோ அல்லது எந்த ஓவர் என்றாலும் வீச தயாராக இருப்பதாக கூறினார். இப்படி பவுலர் ஆர்வமுடம் என்னிடம் வந்து பேசி யோசனை கூறுவதை உண்மையிலேயே விரும்புகிறேன்’ என்றார்.

தினேஷ் கார்த்திக் கருத்து

தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘இது பெரிய இலக்காகும். பனிப்பொழிவின் தாக்கம் இருந்து இருந்தால் பேட்டிங் செய்ய எளிதாக இருந்திருக்கும். ஆனால் பனியின் தாக்கம் எதுவும் இல்லை. எங்களை விட டெல்லி அணியினர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். ரஸ்செல் எப்பொழுது பேட்டிங் செய்தாலும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கும். இருப்பினும் அவரும் மனிதர் தானே. உண்மையை சொல்லப்போனால் கைகளை உயர்த்தி இந்த போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்று தான் கூற வேண்டும். சுழற்பந்து வீச்சு பரவாயில்லை. எங்களது பீல்டிங் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியமானதாகும். நாங்கள் சரியாக பீல்டிங் செய்யவில்லை. அது தான் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது’ என்றார்.

Next Story